தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றியது ஏன்? இது தான் காரணம்! விளக்கிக் கூறிய அமைச்சர் பி.டி.ஆர்!
மதுரை: பெண்கள் சுயமாக உயர்கல்வி கற்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகவே தாலிக்கு தங்கம் என்கிற திட்டத்தை பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டமாக மாற்றியிருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர் இதனைக் கூறினார்.
தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டது தொடர்பாக கடந்த 2 நாட்களாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் அமைச்சர் கூறியுள்ள இந்தக் காரணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வருமுன் காப்போம்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள வெள்ளி வீதியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாமை துவக்கி வைத்த தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், 6 ஆம்புலன்ஸ் சேவைகளை கொடியசைத்து துவங்கி வைத்தார். தொடர்ந்து சமூக நலத்துறையின் சார்பில் 486 பயனாளிகளுக்கு 59.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அமைச்சர் விளக்கம்
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் அப்போது கூறியதாவது; '' கல்வி மற்றும் மகளிர் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியாக அமையும். மனித நேயம், மக்கள் பற்று, சமுதாய பற்றே திராவிட மாடல். திமுகவினர் ஆட்சியில் இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் கொள்கை அரசியல் வாதிகளாகவே இருந்து வருகிறோம்.''

பெண்கள் முன்னேற்றம்
''பெண்கள் முன்னேற்றத்திற்கேற்ப தாலிக்கு தங்கம் என்கிற திட்டத்தை பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டமாக மாற்றியுள்ளோம். இதன் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவதால் அவர்களே சுயமாக உயர்கல்வி பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வாய்ப்பாக அமையும். பெண்கள் தொழில் முனைவோர்களாக உருவெடுக்க வேண்டும். எங்களை பொறுத்த வரை அடிப்படைக் கொள்கைக்கான அரசியலை முன்னெடுத்து வருகிறோம்.'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விமர்சனங்கள்
மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டத்தை நிறுத்துவது கற்பனைக்கு கூட எட்டாத பாதிப்பை ஏற்படுத்தும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்ததுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். இவரைப் போல் இன்னும் பலரும் இந்த விவகாரத்தில் எதிர்க்கருத்து கூறி வந்தனர். இந்தச் சூழலில் அமைச்சர் பி.டி.ஆர். அளித்துள்ள இந்த விளக்கம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications