அந்த மனசு தான் சார் கடவுள்..ஒல்லி மாணவனை கில்லி ஆக்கிய அமைச்சர் பிடிஆர்..கடைசியில் கொடுத்த சர்ப்ரைஸ்
மதுரை : மதுரையில் 23 கிலோ மட்டுமே இருந்த மாணவன் விஷ்வாவுக்கு பழங்கள் வாங்கித் தந்து உடல் எடையை கூட்டியதோடு, உடல் எடை அதிகரித்ததும் சைக்கிள் வாங்கித் தருவதாக அமைச்சர் பிடிஆர்பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். உறுதியளித்தபடி எடை கூடிய மாணவனுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 25ஆம் தேதி முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் - 2ஆம் கட்டத்தை மதுரை முத்துப்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

பின் அங்கு பயிலும் பள்ளி மாணவர்களோடு உணவருந்தி மகிழ்ந்த அமைச்சர் அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலரை அழைத்து உரையாடினார். பேசிக்கொண்டிருக்கும்போதே 7ஆம் வகுப்பு படிக்கும் விஷ்வா என்ற மாணவன் "தலை வலிக்கிறது, மயக்கம் வருகிறது" என கூறிய உடன் அமைச்சர் உடனடியாக அந்த மாணவனை தனியாக அமரச் செய்து அவனுக்கு இனிப்பும், உணவும் வழங்க சொன்னார்.
அவனிடம் உரையாடி அவனது குடும்ப சூழ்நிலையை பின் கேட்டறிந்தார். மிகவும் மெலிந்த தேகமுடையை அம்மாணவனின் உடல்நிலையை கண்ட அமைச்சர் அவனை மருத்துவ பரிசோதனை செய்யவேண்டுமென அங்குள்ள ஆசிரியர்களிடமும் தனது அலுவலக பணியாளர்களிடமும் அறிவுறுத்தினார். பின்னர் அவர் அறிவுறுத்தலின் பேரில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டது.
அம்மாணவன் விஷ்வாவிடம் தனியாக உரையாடிய அமைச்சர் அவனை தனிக்கவனம் செலுத்தி கண்காணிக்க சொன்னார். அம்மாணவன் இல்லத்திற்கு குழந்தை நல மருத்துவர் மற்றும் டயட்டிசியன்களை அனுப்பி வைத்து அவனை மருத்துவ பரிசோதனை செய்ய வலியுறுத்தினார். இரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து பார்த்ததன் அடிப்படையில் அவன் உடல் எடை மிகவும் குறைந்து இருந்தான். மேலும் உணவு உண்பதில் அவனுக்கு சிரமம் இருந்தது.
தனது இல்லத்துக்கு அழைத்து அவனிடமும் அவனது குடும்பத்தாரிடம் உரையாடிய அமைச்சர் , அவனுக்கு என்ன வேண்டும் என்ற கேட்டார். அப்போது விளையாட்டாக அம்மாணவன் தனக்கு சைக்கிள் வேண்டுமென சொல்ல.. "உனது உடல் எடை வெறும் 23 கிலோ மட்டுமே உள்ளது. சைக்கிள் ஓட்ட உனக்கு உடல் பலம் வேண்டாமா? 30 கிலோ எடையை உயர்த்தி கொண்டு வா. நான் உனக்கு சைக்கிள் வாங்கித் தருகிறேன்" என்று கூறினார்
அன்றுமுதல் கடந்த 11 மாதங்களாக அவனுக்கு தொடர்ச்சியாக பழங்கள், மருந்துகள், ஊட்டச்சத்து பானங்களை தனது அலுவலகப் பணியாளர்கள் மூலம் கொடுத்து வந்தார். அது மட்டுமா உடல் எடை அளக்கும் கருவி ஒன்றை வாங்கித் தந்து வாரம்தோறும் எடையை கண்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸப் மூலம் அனுப்பச் சொன்னார்.
நீண்ட நாட்கள் தொடர்ந்து அவன் தனது உடல் எடையை உயர்த்தி அவ்வப்போது அதை அமைச்சருக்கு தெரியப்படுத்தி வந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் மதுரை வந்த அமைச்சர் மாணவன் விஷ்வா உடல் எடை 30 கிலோ அதிகரித்திருப்பதை கேட்டறிந்தார். அவனை இன்று தனது இல்லத்திற்கு அழைத்து வந்து சர்ப்ரைஸ் ஆக புதிய சைக்கிள் ஒன்றை பரிசளித்து மகிழ்ந்தார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். வெறுமனே அறிவுரை கொடுத்ததோடு நின்றுவிடாமல் தொடர்ந்து அம்மாணவனை கண்காணித்து அம்மாணவனுக்கு தேவையானதை கொடுத்து அவன் உடல்நிலை சரியாகும் வரை விடாமல் கண்காணித்து வந்த அமைச்சர் பிடிஆரின் செயல் அவர்களது பெற்றோர்களை நெகிழ வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications