"தமிழகத்திற்கே நிதிகொடுக்கும் பிடிஆர்.. மதுரைக்கு மட்டும் கொடுப்பதில்லை" பாயும் செல்லூர் ராஜூ!
மதுரை: தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்கும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரைக்கு மட்டும் நிதி வழங்குவதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை தெற்கு மாசி வீதி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மது கூட இருக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னார். ஆனால் தற்போது தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது.

பிடிஆர் மீது விமர்சனம்
அன்றைக்கு எதிர்கட்சியாக இருந்த மு.க. ஸ்டாலின் ஜோசியத்தை பார்த்து அதிமுக ஆட்சி 3 மாத காலங்களில் கவிழ்ந்துவிடும் என்று கூறினார். திமுக ஆட்சியில் விடியல் தருகிறேன் என்று கூறி இருட்டை கொடுத்துவிட்டார். நமக்கு விடியவே இல்லை. சட்டை கிழிந்து போனால் ஒட்டு போட்டு தைப்பார்கள். அது போல தான் மதுரைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் போது சாலை அமைக்காமல் சாலையின் மேல் மேட்ச் ரோடு போட்டார்கள். தமிழகத்திற்கே நிதி கொடுக்கும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரைக்கு மட்டும் நிதி கொடுப்பதில்லை.

திராவிட மாடல்
திமுகவினர் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள். ஆனால் கரண்ட் கொடுக்கவும் திறனில்லை, மின்சார கட்டணத்தை உயர்த்தவும் தயக்கமில்லை. அதிமுக ஆட்சியில் ஆவின் பாலில் ஈ இருந்திருந்தால் வானத்திற்கும், பூமிக்கும் திமுகவினர் குதித்திருப்பார்கள் என்று விமர்சித்தார்.

ஆ.ராசா விவகாரம்
தொடர்ந்து ஆ.ராசா விவகாரம் குறித்து பேசிய அவர், பெற்றை தாயை இழிவாக பேசிய ஆ.ராசாவை மதிக்கலாமா? குங்குமம் வைத்தவர்கள் விபச்சாரியின் பிள்ளைகள் என ஆ.ராசா கூறினார். ஏழைகளின் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு இன்று ஆண்டிமுத்து ராசா இன்று ஆ.ராசாவாக மாறிவிட்டார். இந்துக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இந்துக்களை இழிவாக பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார்.

மதுரை வரும் இபிஎஸ்
தொடர்ந்து ஜெயலலிதா மாதிரி ஆட்சி செய்வதாக சொன்னால் மட்டும் போதாது. திமுக கட்சியில் நடைபெறும் தவறுகளை கண்டிக்க வேண்டும். வரும் 29ம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications