6-7 ஆண்டுகால பொருளாதார சரிவை 2 ஆண்டுகளில் சரிசெய்து வருகிறோம்.. “இனி வேகம்தான்” : அமைச்சர் பிடிஆர்
மதுரை : தமிழ்நாட்டில் கடந்த 7 ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார சரிவை, திமுக அரசு இரண்டு ஆண்டுகளில் சரி செய்து வருவதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தமிழியக்கம் அமைப்பு சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். விஐடி பல்கலைக்கழக வேந்தரும் தமிழியக்கம் நிறுவனத் தலைவருமான கோ.விசுவநாதன் உள்ளிடோரும் பங்கேற்றனர்.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பிடிஆர், ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "சமூக நீதியின் அடிப்படையில் கல்வி, பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாடு தற்போது பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவால் அரசை வழி நடத்த முடியவில்லை. இதன் காரணமாக பொருளாதாரம் சரிவடைந்தது.
கடந்த 6-7 ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார சரிவை இந்த இரண்டு ஆண்டுகளில் சரி செய்து வருகிறோம். நல்ல திட்டங்களுக்கு நிதி ஒரு தடையாக இல்லாத ஒரு சூழலை ஏற்படுத்தி உள்ளோம். பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தபோது 3 சதவிகித நிதி, வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப்பட்டது. தற்போது, பொருளாதாரம் சரிவடைந்துள்ள நிலையில் 1 சதவிகித நிதி செலவு செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான திறன் மிகவும் சரிந்துள்ளது. அதனால் இந்த ஆண்டு திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை முழுமையாக செலவு செய்ய முடியுமா என்ற சூழல் உள்ளது. நிதியை அதிகரிக்க வேண்டுமென்றால், உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு வரும் காலங்களில் மிக வேகமாக செயல்படும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications