மதுரை மிசா பாண்டியன் திமுகவிலிருந்து சஸ்பெண்ட்! அமைச்சர் பிடிஆர் ஆதரவாளர் மீது அதிரடி ஆக்ஷன்!
மதுரை: மதுரை மாநகர திமுக பிரமுகரும், அமைச்சர் பிடிஆரின் தீவிர ஆதரவாளருமான மிசா பாண்டியன் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மிசா பாண்டியன் நடந்துகொண்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மிசா பாண்டியன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்.''
மிசா பாண்டியன் மீது இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த திமுக பெண் கவுன்சிலர் கொடுத்த புகாரே அவரை கட்சியிலிருந்து கட்டம் கட்டக் கூடிய அளவுக்கு சென்றிருக்கிறது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 54வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் நூர் ஜஹான். காஜிமார் தெருவை சேர்ந்த இவர் மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில் மதுரை மாநகரட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட நூர் ஜஹான், தனது வார்டு பிரச்சனை குறித்து மண்டலத் தலைவர் என்ற முறையில் பாண்டிச்செல்வியிடம் சில கேள்விகளை கேட்டிருக்கிறார்.
அப்போது அங்கிருந்த பாண்டிச்செல்வியின் கணவரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியன், நன்றி மட்டும் தான் சொல்லணும், கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது எனக் கூறியதாகவும் பதிலுக்கு திமுக பெண் கவுன்சிலரான நூர்ஜஹான், அப்படியெல்லாம் தன்னால் போக முடியாது என்றும் தனது வார்டு பிரச்சனையை பற்றி தாம் கேட்காமல் வேறு யார் கேட்பார்கள் என கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அங்கு நடந்த வாக்குவாதம் முற்றி, பஞ்சாயத்து காவல் நிலையம், மதுரை மாநகர திமுக செயலாளர் கோ.தளபதி, அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி ஆகியோர் வரை சென்றிருக்கிறது.
இந்த நிலையில் தான் அமைச்சர் பிடிஆரின் தீவிர ஆதரவாளரும், மதுரை மாநகர திமுக பிரமுகருமான மிசா பாண்டியன் மீது திமுக தலைமை அதிரடி ஆக்ஷன் எடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications