'கலைஞர் திமுக'வை தொடங்கும் அழகிரி... கூட்டணி பேச்சுவார்த்தையில் கூண்டோடு குதித்த குடும்பம்
மதுரை: தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் புதிய வரவாக 'கலைஞர் திமுக' கட்சியை களம் இறக்குவதில் மு.க. அழகிரி மும்முரமாக இருக்கிறார். இப்போது அழகிரிக்கு உறுதுணையாக ஒட்டுமொத்த குடும்பமும் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் படுபிசியாக இருக்கின்றனராம்.
திமுகவில் மீண்டும் அழகிரி சேர்க்கப்பட வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தைகளை கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் மேற்கொண்டனர். அழகிரி தரப்பில், மகனுக்கு திமுகவின் ஒரு அறக்கட்டளையை கொடுத்தாலே போதும் என்கிற அளவில் பேசப்பட்டது.
தயாரான அழகிரி
கருணாநிதி குடும்பத்தில் பலரும் இதை ஏற்கும் மனநிலையில் இருந்தாலும் செல்வாக்கு செலுத்தும் சிலருக்கு இதில் விருப்பம் இல்லை. இதுதான் முடிவு என ஆகிவிட்டதால் அழகிரி இப்போது தனி ஆவர்த்தனத்துக்கும் தயாராகிவிட்டார்.
அழகிரி ஆலோசனை
மதுரையில் ஜனவரி 3-ந் தேதி ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார் அழகிரி. மதுரையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலைஞர் திமுக என்கிற புதிய கட்சியை அழகிரி தொடங்குவது என முடிவெடுக்க உள்ளார்.
திமுகவுக்கு வேட்டு
அழகிரியின் முதல் இலக்கே தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றிக்கு வேட்டு வைப்பதுதான். இதற்கான வேலைகளில் ஒட்டுமொத்த அழகிரி குடும்பமும் இப்போதே தீவிரமாக இறங்கிவிட்டது என்கின்றன மதுரை வட்டாரங்கள்.
பேச்சுவார்த்தையில் காந்தி அழகிரி
தென் தமிழகத்தில் ஜான் பாண்டியன், புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரை கலைஞர் திமுகவின் கூட்டணிக்குள் கொண்டு வருவது தொடர்பாக அழகிரி மனைவி காந்தி அழகிரி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறாராம். இதேபோல் ரஜினி, பாமக உள்ளிட்ட தரப்புகளுடன் அழகிரி தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்துகிறாராம்.
அழகிரியின் ஹிட் லிஸ்ட்
தென் மாவட்டங்களில் திமுகவுக்கு கிடைக்கக் கூடிய தொகுதிகளில் வாக்குகளை பிரிப்பதுதான் அழகிரி கட்சியின் புதிய அஜெண்டாவாக இருக்குமாம். திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, அவரது மகன் செந்தில்குமார் ஆகியோர் போட்டியிடப் போகும் தொகுதிகள் அழகிரியின் பார்வையில் ஹிட் லிஸ்டில் இருக்கின்றனவாம்.