வாட்ஸ்அப் குரூப், சோசியல் மீடியாவை கண்காணிங்க.. இது நடக்கவே கூடாது.. ஆர்டர் போட்ட முதல்வர் ஸ்டாலின்!
5 மாவாட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரைகளைக் கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மதுரை : சமூக ஊடகங்கள் மூலமாக சாதி மோதல்களைத் தூண்டும் வகையில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே அத்தகைய எண்ணங்களைத் தூண்டும் வகையில் செயல்படும் நபர்களையும், வாட்ஸ்ஆப் குழுக்களையும் கண்காணித்து உடனுக்குடன் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டம், ஒழுங்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கள ஆய்வில் முதலமைச்சர்
'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் வேலூரிலும், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கடந்த பிப்ரவரி 15,16 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்திற்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்தார் முதல்வர் ஸ்டாலின்.

ஆய்வுக் கூட்டம்
மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். இதில், இந்த 5 மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் மற்றும் வணிக சங்கங்கள், விவசாய சங்கங்கள், மீனவர் சங்கங்கள் மற்றும் பல்வேறு சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். பின்னர் மாலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

எச்சரிக்கையாக
இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மாவட்டங்களில் நிலவிவரும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பல்வேறு முக்கியமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளீர்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தென்மாவட்டங்களில், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது என்பது மிக மிக முக்கியமான பணியாகும். தென் மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறை உயர் அலுவலர்களாகிய நீங்கள் மிகுந்த கவனத்துடன் பணியாற்றி சட்டம் ஒழுங்கினை சீராக பராமரிக்கவேண்டும். காவல்துறை அலுவலர்கள் தடுப்புப் பணிகள், ரோந்து பணிகள் ஆகிய அடிப்படைக் காவல் பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், அதனை குறைக்க முடியும் என்பதையும் உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். சைபர் கிரைம் குற்றங்களுக்கு காரணமானவர்களை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியது உங்கள் கடமை. இவ்வகை குற்றங்களில் பெரும்பாலும் ஏமாற்றப்படுவது எளிய, நடுத்தர வர்க்கத்து மக்கள். ஆகவே, தொழில்நுட்ப பிரிவுகளின் திறனைக் கூர்மைப்படுத்தி இதனை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

சாதி மோதல்களை
அடுத்தபடியாக, சமூக ஊடகங்கள் மூலமாக சாதி மோதல்களைத் தூண்டும் வகையில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே அத்தகைய எண்ணங்களைத் தூண்டும் வகையில் செயல்படும் நபர்களையும், வாட்ஸ்ஆப் குழுக்களையும் கண்காணித்து உடனுக்குடன் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். எந்தக் காரணம் கொண்டும் உங்கள் பகுதிக்குள் சாதி ரீதியான உரசல்களோ, பிரச்சனைகளோ, ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகும். அப்படி செய்யவேண்டுமானால், அதற்கு உங்களிடம் களநிலவரம் முழுமையாகக் கையில் இருக்கவேண்டும். தொடர்ந்து கள ஆய்வில் ஈடுபட்டு காவல்நிலையங்களை திடீர் தணிக்கை செய்து சார்நிலை அலுவலர்களின் பணியினை தொடர்ந்து கவனித்து மேற்பார்வையிட்டால்தான் கோட்டம் அல்லது சரகம் முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆகவே தான், களப்பணியின் முக்கியத்துவத்தை நான் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறேன்.

கன்விக்சன் ரேட்
இன்றைய ஆய்வில் குறிப்பிடப்பட்ட மற்றுமொரு முக்கியமான விபரம், தண்டனை விகிதம் அதாவது கன்விக்சன் ரேட். நான் எப்போதும் குறிப்பிடுவது போல், புகாரைப் பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்தால் மட்டும் நம் கடமை முடிந்துவிடாது. அதனை, விரைந்து விசாரித்து, நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதே முழுமையாக உங்கள் பணியினை செய்ததாகக் கருதப்படும். அப்போது தான் பொதுமக்களுக்கும் காவல்துறையின் மீது பெரும் மதிப்பு உண்டாகும். இதற்காக நீங்கள் நீதித்துறையுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அடுத்தபடியாக, நான் குறிப்பிட விரும்புவது சாலை விபத்துகள். விலை மதிப்பற்ற உயிர்கள் பறிபோவது, பெரும் வேதனைக்குரிய நிகழ்வாகும். எனவே, சாலைப் பாதுகாப்புப் பணிகளில் பொதுமக்களுடன் இணைந்து, விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை விரிவுபடுத்தி, அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து, அப்பகுதிகளில் மீண்டும் விபத்து ஏற்படாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இப்பணியில் நீங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும், என்எஸ்எஸ், என்சிசி போன்ற மாணவ அமைப்புகளையும் பெருமளவு ஈடுபடுத்த வேண்டுமென்று அறிவுறுத்த விரும்புகிறேன்.

போதைப் பொருள் ஒழிப்பு
தென்மாவட்டங்களைப் பொருத்தவரை, அடுத்து நான் குறிப்பிட விரும்புவது, போதைப் பொருள் ஒழிப்பு குறித்ததாகும். பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய இம்மாவட்டங்களில் இளைஞர்களை போதைப்பொருள் என்ற தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் பெரிய வியாபாரிகளை, போதைப்பொருள் கடத்துபவர்களை நீங்கள் குறிப்பாக கண்டறிந்து கைதுசெய்ய வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்கவேண்டும். இதனை, காவல்துறை தலைவரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இறுதியாக, நான் எனது முந்தைய காவல்துறை ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததை இங்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அது என்னவென்றால், காவல்துறை என்பது ஏழை, எளிய மனிதர்களின் பாதுகாவலனாக, அவர்களது உயிருக்கும், உடமைக்கும் எந்நாளும் துணை நிற்பவர்களாக செயல்படவேண்டும். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பதை நினைவில் கொண்டு காவல்நிலையத்திற்கு வரும் எவராக இருந்தாலும், எளியவர், உயர்ந்தவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் அவர்களுக்கு உரிய மரியாதையினைத் தந்து அவர்களது குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுங்கள்.

அரசு துணை நிற்கும்
காவல் நிலையம் என்பது, எளிய மனிதர்கள், பெண்கள், சமுதாயத்தின் விளிம்பு நிலை மக்கள் என எல்லோரும் எவ்வித தயக்கமும் இன்றி வந்து புகார் அளிக்கக் கூடிய ஒரு இடமாக இருக்கவேண்டும். இதற்காக, உங்கள் சார்நிலை அலுவலர்களாகிய காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் ஆகியவர்களுக்கு தக்க அறிவுரைகள் மற்றும் பயிற்சிகளை வழங்குங்கள். "காவல் துறை உங்கள் நண்பன்" என்ற சொல்லுக்கேற்ப, நாம் செயல்படவேண்டும். சிறப்பான குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், குற்றங்கள் நிகழ்ந்த பிறகு அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துதல், புகார் தெரிவிக்க வரும் மக்களிடம் பரிவோடு நடந்து கொள்ளுதல் ஆகியவையே சிறந்த காவல் பணிக்கு இலக்கணமாகும். அவற்றை, நீங்கள் ஒவ்வொருவரும் மேற்கொண்டு தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் சட்டம் ஒழுங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும். உங்கள் சிறப்பான பணிக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும்" என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

கோபப்படாதீங்க சார்
முன்னதாக, மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் முடிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது மனுக்களைக் கொடுப்பதற்காக சாலையோரங்களில் பொதுமக்கள் காத்திருந்தனர். அவர்களை பார்த்தவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காரை விட்டு இறங்கினார். அப்போது அவருக்கு பாதுகாப்பாக இருந்த போலீசார், தமிழக முதல்வரை சூழ்ந்துகொண்டு மனுக்களை கொடுக்க முண்டியடித்தவர்களை தடுத்து பொதுமக்கள் மீது கோபப்பட்டனர். அதனைப் பார்த்த தமிழக முதல்வர், தனக்கு பாதுகாப்பளிக்கும் பி.எஸ்.ஓவை பார்த்து 'கோபப்படாதீங்க' என்றார். அதையும் கேட்காமல் மீண்டும் பொதுமக்களை அவர் கைகளால் தள்ளினார். மீண்டும் கவனித்த தமிழக முதல்வர், 'சார், கோபப்படாதீங்க' எனக் கூறி அவரை சமாதானப்படுத்தி முண்டியடித்த பொதுமக்களிடம் முக மலர்ச்சியுடன் மனுக்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications