மாஸ்க் இல்லை.. சமூக இடைவெளி சுத்தமாக இல்லை.. மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள்!
மதுரை: மதுரையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கண்மாயில் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் சோழப்பேரேரி என அழைக்கப்படும் புகழ்பெற்ற பெரிய கண்மாய் ஒன்று உள்ளது.

மீன்பிடி திருவிழா
இங்கு ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதை எல்லாம் மதிக்காத மக்கள் நேற்று நள்ளிரவு முதலே ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திருவாதவூர் பகுதியில் குவிய தொடங்கினார்கள்.

நிறைய மீன்கள் பிடித்தனர்
மதுரை மாவட்டத்தில் இருந்தும், பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் திருவாதவூர் பெரிய கண்மாய்க்கு அலை, அலையாக வரத் தொடங்கினார்கள்.அதிகாலையிலேயே கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்களைப் பிடித்தனர்.பெரிய அளவிலான கட்லா மீன் ,விரால் மீன் ஜிலேபி ,கெழுத்தி உளுவை உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் அதிக அளவு மீன்பிடி வலைகளில் சிக்கின. மேலும் சிறிய வகை வட்டசுழி உள்ளிட்ட மீன்களையும் அதிகமானவர்கள் பிடித்தனர்.

ஐதீக முறை
ஐதீக முறைப்படி இந்த கண்மாயில் பிடிக்கப்பட்ட மீன்களை மக்கள் அவரவர் இல்லங்களில் வைத்து தங்களது கடவுளுக்கு பூஜை செய்வார்களாம்.பின்னர் அதனை சமைத்து தாங்களும் சாப்பிட்டு, தங்களது உறவினர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பார்களாம் . இந்த பெரிய கண்மாயில் மீன் பிடிப்பதை பெரிய பாக்கியமாகக் கருதுவதாக மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற மக்கள் கூறினார்கள்.

அதிகாரிகள் அனுமதித்தது ஏன்?
ஒரு புறம் இது பாரம்பரிய மீன்பிடி திருவிழாவாக இருந்தாலும் கொரோனா தடுப்பு விதிகளை காற்றில் பறக்க விட்டு மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பங்கேற்றது நியாயம்தானா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளனர். அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளாதது ஏன்? என்று பலரும் கேள்வி கேட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications