மண்குடிசை டூ மாடி வீடு; மகிழ்ச்சி மழையில் சின்னப்பிள்ளை! சொன்னதைச் செய்த முதல்வர் ஸ்டாலின்!
மதுரை: நான்கு மாதங்களில் தனக்கு வீடு கட்டிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு சமூக சேவகியான மூதாட்டி சின்னப்பிள்ளை உணர்ச்சிப்பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.
எத்தனையோ பேர் பத்மஸ்ரீ விருதை வாங்கி இருக்கிறார்கள். அவர்களை மக்கள் அன்றைக்கு ஒருநாள் தான் நினைவில் வைத்திருப்பார்கள். ஆனால், பிரதமராக வாஜ்பாய் இருந்த காலத்தில் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார் சின்னப்பிள்ளை. அப்போது அவர் பாட்டிதான். அவரது சேவையை மதித்து அன்றைய பிரதமர் வாஜ்பாய் பாட்டியின் காலில் விழுந்து வணங்கினார். அது நாடு முழுவதும் தலைப்புச் செய்தியானது.

மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாட்டி சின்னப்பிள்ளை. அழகர் கோயில் போகும் சாலையில் அப்பன் திருப்பதி என்ற ஊரை அடுத்து உள்ளது இந்தப் பில்லுசேரி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெருமாளின் மனைவிதான் இந்தச் சின்னப்பிள்ளை. தனது கிராமத்தில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து விவசாய வேலைகளுக்காக அழைத்துச் சென்று வந்த இவர், வேலை முடிந்ததும் அவர்களுக்கான கூலியை நில உரிமையாளர்களிடம் இருந்து மொத்தமாகப் பெற்று தனித்தனியாகப் பிரித்துக் கொடுத்து வந்தார். எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்கு இவரது உதவி மிகப்பெரியதாக இருந்தது.
விவசாய கூலித் தொழிலாளியான சின்னப்பிள்ளையின் சேமித்து வைத்த பணத்தை சில நிதி நிறுவனங்கள் ஏமாற்றிவிட்டன. ஆகவே விரக்தியிலிருந்த இந்தப் பாட்டிக்கு 'களஞ்சியம்' என்ற சுய உதவிக் குழுதான் மறுவாழ்வு கொடுத்தது. கடந்த 2001ஆம் ஆண்டு ஸ்ரீசக்தி விருது வழங்கப்பட்டது. அதன் பிறகுதான் பில்லுசேரி கிராமத்திற்குச் சாலை வசதியும் பேருந்து வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாகக் கட்டித் தருவதற்கு சின்னப்பிள்ளையே முயற்சி மேற்கொண்டார். இப்படி ஊருக்கெல்லாம் பைசா பணம் இல்லாமல் உழைத்த இந்தச் சின்னப்பிள்ளை அவரது மகன் சின்னதம்பியின் வீட்டில் ஒண்டிக் குடித்தனம் செய்து வருவதாகக் கடந்த மார்ச் மாதம் செய்தி வெளியானது. வரதட்சணைக் கொடுமை, கந்துவட்டியால் பாதித்த பெண்கள், மது போதையால் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் எனப் பலரது வாழ்க்கையைக் கரை சேர்த்த இவர் கரைசேர முடியாமல் வறுமையில் தத்தளித்து வந்தார். மக்கள் சேவைக்காகக் கடந்த 2010 ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்கே இந்த நிலை. அன்றைய முதல்வர் மு.கருணாநிதி, இந்தப் பாட்டிக்குப் பொற்கிழி வழங்கி பாராட்டி இருந்தார். இப்போது இந்தத் தள்ளாத 72 வயதிலும் அவர் சமூகசேவை செய்து வருகிறார் இந்த மூதாட்டி.
இத்தனை சேவைகளைச் செய்த இவருக்கு வசிப்பதற்கு ஒரு வீடு இல்லை. அந்தக் கொடுமையான செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இந்தப் பாட்டிக்குப் பிரதமர் மோடி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆண்டுகள் 2 ஆண்டுகள் கடந்து அவருக்கு உரிய வீடு வழங்கப்படவில்லை. அதனால் வருத்தமடைந்த சின்னப்பிள்ளை ஊடகங்கள் மூலமாகத் தனது வறுமை நிலையை எடுத்துக் கூறி, முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்திருந்தார்.

அதனையொட்டி 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி அவருக்கு மாத்தூர் ஊராட்சிக்கு விடப்படப் பகுதியில் அரசு நிலமும் உடனடியாக ஒதுக்கித் தரப்பட்டது. அந்த நிலத்தில் இப்போது 3.50 லட்ச ரூபாய் செலவில் மாடி வீடு கட்டித் தரப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வீடு கட்டும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. அந்த வீட்டை வந்து சின்னப்பிள்ளை பார்வையிட்டார். மண் குடிசை போல் ஒரு காலத்திலிருந்த வீட்டில் வாழ்ந்து வந்த சின்னப்பிள்ளை இப்போது கான்கிரீட் தளம் அமைத்த மாடி வீட்டில் மகிழ்ச்சியாக வாழ இருக்கிறார்.
"கடந்த 4 வருடத்திற்கு முன்னால் என் வீட்டுக்கு சில ஆண்கள் வந்தனர். எனக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துவிட்டு, மோடி திட்டத்தின் கீழ் வீடு கட்டி தருகிறோம் என்று உறுதிமொழி அளித்தனர். ஆனால், அதன்பின்னர் அவர்கள் திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஆகவே முதல்வர் ஸ்டாலின் அய்யாவுக்குக் கோரிக்கை வைத்தேன். 2 நாளில் அரசு அதிகாரிகள் வந்து 2 செண்ட் நிலத்திற்கான பட்டாவைக் கொடுத்தனர். அடுத்த 4 மாதத்தில் வீட்டைக் கட்டியே முடித்துவிட்டார்கள். முதல்வருக்கு என் நன்றி. மறக்கவே முடியாது இந்த உதவியை" என்கிறார்.












Click it and Unblock the Notifications