வீட்டில் இருந்தபடியே கந்தசஷ்டி கவசம் பாடுங்க.. அது கோட்டையில் இருப்பவர்களை அசைக்கட்டும்: எல்.முருகன்
மதுரை: "முருக பக்தர்கள் மாநாட்டில் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தை பல லட்சக்கணக்கானோர் இணைந்து பாடி தமிழகம் முழுவதும் எதிரொலிக்கச் செய்வோம். அது, சென்னை கோட்டையில் இருப்பவர்களையும் அசைக்கட்டும்" எனத் தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
முருக பக்தா்கள் மாநாடு இன்று மாலை மதுரையில் நடைபெறவுள்ளது. இந்து முன்னணி சாா்பில் மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு இன்று மாலை நடைபெற உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் மாநாடானது இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு திருப்பரங்குன்றம் மலையைப் போன்று பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகள் கண்காட்சியை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த மாநாட்டில், ஏராளமானோர் ஒன்றாக சேர்ந்து கந்தசஷ்டி கவசம் படிக்கும் சாதனை நிகழ்ச்சியும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கெடுபிடிகளையும் தாண்டி, மதுரையில் இந்து முன்னணி சார்பில் இன்று முருக பக்தர்கள் மாநாடு பெரும் எழுச்சியுடன் நடைபெறுகிறது. தமிழகத்தின் கலாச்சாரத் தொன்மையையும், பண்பாடு மற்றும் புராதன அடையாளங்களையும் ஆலயங்களையும் மீட்டெடுக்க உறுதியேற்கும் நிகழ்வு தான் இந்த முருக பக்தர்கள் மாநாடு.
மாநாடு நாளை தான் என்றாலும், கடந்த சில நாட்களாகவே லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் திரண்டுள்ளனர். சித்திரை திருவிழாவைப் போல மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கி விட்டது. சமுதாயத் தலைவர்கள், ஆன்மீகவாதிகள், நமக்கு வழிகாட்டும் மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வந்த வண்ணம் உள்ளனர். நாளை இன்னும் பல லட்சம் பேர் கூட உள்ளனர்.
உலகத்தோர் போற்றும் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் புகழ் பரப்புகின்ற விதமாக நடைபெறும் இந்த முருக பக்தர்கள் மாநாட்டில், நமது பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் உலகெங்கும் வாழ்கின்ற முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு, முருகப் பெருமானின் புகழை உலகறியச் செய்வோம்.
முருகப் பெருமானின் புகழ் போற்றும் கந்த சஷ்டி கவசத்தை அசிங்கபடுத்த முயன்ற கறுப்பர் கூட்டத்தை வேல் யாத்திரை நடத்தி வேரறுத்தோம். திருப்பரங்குன்றம் மலையில் இந்துக்களின் உரிமையை பறிக்கத் துடிக்கும் திமுக அரசுக்கு முருக பக்தர்கள் மாநாட்டின் மூலம் உரிய பதிலடி கொடுப்போம். முருக பக்தர்கள் மாநாட்டில் இன்று மாலை ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தை பல லட்சக்கணக்கானோர் இணைந்து பாடி தமிழகம் முழுவதும் எதிரொலிக்கச் செய்வோம்.
மதுரை மாநாட்டில் கலந்து கொள்ள இயலாத மக்கள், தங்கள் வீடுகளில் இருந்தபடியே கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்திடுமாறு தமிழக மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம், தமிழக இந்து மக்களின் உரிமை முழக்கம் உலகம் முழுவதும் எதிரொலிக்கட்டும்..! அது, சென்னை கோட்டையில் இருப்பவர்களையும் அசைக்கட்டும்..!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications