நான் பதவி விலகப் போகிறேனா? ’அதுக்கு’ வேற வேலை பார்க்கலாம்! மதுரையில் கொந்தளித்த நயினார் நாகேந்திரன்!
மதுரை: நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை எனவும், 2026க்குப் பிறகு யார் ஐசியூவிற்கு செல்கிறார் எனத் தெரியும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மேலும், அதிமுக விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் என்ன சொல்கிறாரோ அதுதான் இறுதியானது எனவும் கூறியுள்ளார்.
பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்குச் செல்வதற்காக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "அதிமுக வலுவாகத்தான் உள்ளது. அண்ணன் எடப்பாடி பழனிசாமி போன்ற இடமெல்லாம் ஆரவாரம் கொடுக்கிறார்கள், ஆதரவு கொடுக்கிறார்கள் அவர்கள் பொறாமையிலேயே சொல்கிறார்கள். அவர்கள் எண்ணத்தைச் சொல்கிறார்கள்.

நயினார் நாகேந்திரன்
அதிமுகவை பாஜக உடைக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் தான் இன்றைக்கு அவர்களைத் தலைவராக ஏற்று இருக்கிறோம். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் மத்திய அமைச்சரைச் சந்திப்பதற்குத் துணிச்சல் தேவை இல்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் உள்துறை அமைச்சரைச் சந்தித்ததாகச் சொல்லி இருக்கிறார். எனக்கு முழுமையான கருத்து தெரியாது. பாஜக ஐசியூவில் உள்ளதாக உதயநிதி சொல்லி இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி
2026க்குப் பிறகு யார் ஐசியூவிற்கு செல்கிறார் எனத் தெரியும். ஓபிஎஸ் கூட்டணிக்கு எந்த நிபந்தனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் டிடிவி இபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளர் ஆகக் கூடாது எனச் சொல்வது அவர் சொந்தக் கருத்து. ஓபிஎஸ்ஸிடம் எந்த நேரமும் அழைத்துப் பேசுவேன். யார் மீதும் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. அண்ணன் ஓபிஎஸ்ஸிடம் கண்டிப்பாகப் பேசுவேன், பேசிவிட்டு சொல்கிறேன்.
அண்ணாமலை
செங்கோட்டையனை அமைச்சர்கள் சந்தித்ததால் கூட்டணிக்குள் எந்தவித இடர்ப்பாடும் இல்லை. உள்துறை அமைச்சர் இங்கு வந்து சந்தித்தால் தான் அப்படிப் பேச வேண்டும். இவர் போய் அங்கு சந்தித்திருக்கிறார். திமுக வலுவாக இருக்கிறது என உதயநிதி சொல்வதாகச் சொல்லி இருக்கிறார். அண்ணாமலை திமுக வலுவாக இருப்பதாகச் சொல்லவில்லை.
பதவி விலகல்
எனக்கு பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மற்றும் நட்டா ஜி என் மீது அளவற்ற அன்பும், பாசமும் வைத்திருக்கிறார்கள். கங்கைகொண்ட சோழபுரத்தில் பேசும் போது கூட நயினார் நாகேந்திரன் மீது பாசம் வைத்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். உள்துறை அமைச்சர் என் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்து இருக்கிறார். இப்படி இருக்கும்போது நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் பத்திரிகை தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும்.
அதிமுக கூட்டணி
தனியார் நாளிதழுக்கு என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு வேறு ஏதாவது தொழில் செய்யலாம். இப்படி எழுதுவதற்குப் பதிலாக குடும்ப ரீதியாக அவர்கள் ஏதாவது தொழில் செய்யலாம். இதற்கு மேலும் காட்டமாக எனக்குப் பேசத் தெரியாது. நானும் இது போன்று தேவையில்லாத விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அதிமுக கூட்டணி கட்சி பிளவு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் என்ன சொல்கிறாரோ அதுதான். அங்கு பிளவு என்பது கிடையாது." என்றார்.












Click it and Unblock the Notifications