முக்குலத்தோர் முகமாக விரும்பும் நயினார் நாகேந்திரன்.. ஓபிஎஸ், டிடிவி தினகரனை கழற்றிவிட்டதன் பின்னணி!
மதுரை: முக்குலத்தோர் சமூகத்தின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தி கொள்ள வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் விரும்புவதால், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்க மறுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் நயினார் நாகேந்திரனின் மோசமான அணுகுமுறை காரணமாகவே, இருவரும் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசியலில் தென் மாவட்டங்கள் மிகமுக்கிய பங்கு வகித்து வருகின்றன. தென் மாவட்டங்களில் எந்தக் கட்சி அதிக தொகுதிகளில் வெல்கிறதோ, அந்தக் கட்சியே ஆட்சி அமைக்கும். ஜெயலலிதா இருந்தவரை தென் மாவட்டங்களில் அதிமுக கொடி நாட்டி வந்தது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின் தென் மாவட்டங்களில் அதிமுகவின் பிடி தளர்ந்துள்ளது.

இதனை பயன்படுத்தி திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அதற்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளே சாட்சி. ஏனென்றால் மதுரை, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக 2வது இடத்தை பிடித்தது. இதன் மூலமாக முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் பாஜகவுக்கான ஆதரவு அதிகரித்து வருவதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தமிழக பாஜகவின் தலைவராக கொண்டு வரப்பட்டார். இதன்பின் தென் மாவட்டங்களில் பாஜகவை வலுப்படுத்தும் பணிகள் அவருக்கு அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் சமூக பிரதிநிதியாக நயினார் நாகேந்திரன் இருக்க வேண்டும்.. அதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்று டெல்லி மேலிடம் அறிவுறுத்தி இருந்தது.
ஆனால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அளவிற்கு நயினார் நாகேந்திரன் இன்னும் வளரவில்லை. அதுமட்டுமல்லாமல் இருவருமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார்கள். ஓபிஎஸ் மறவர் சமூகத்திற்கும், டிடிவி தினகரன் அகமுடையார் சமூகத்தின் பிரதிநிதியாக இருப்பதால், நயினார் நாகேந்திரன் வளர்ச்சி அடைய முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இதன் காரணமாக நயினார் நாகேந்திரன், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களான ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் அணுகிய போது, நயினார் நாகேந்திரன் உரிய பதிலை அளிக்கவில்லை. அதேபோல் டிடிவி தினகரனுக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் அமைதி காத்துள்ளார்.
இதனால் இவர்கள் இருவரும் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்க தள்ளப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அதிமுகவில் நயினார் நாகேந்திரன் இருந்த போது, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பழைய காழ்ப்பும் சேர்ந்து, முக்குலத்தோர் சமூக தலைவர்களுக்கு இடையிலான ஈகோ பிரச்சனையாக மாறி இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications