எம்.ஜி.ஆர். பாணியில் பி.டி.ஆர்; அரசு விழாவில் என்ன செய்தார் தெரியுமா? வியந்துபோன அதிகாரிகள்!
மதுரை: மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்த ஒரு காரியம் அங்கிருந்த அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியது.
மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்படுள்ள புதிய லிஃப்டை திறந்து வைப்பவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என அழைப்பிதழில் பெயர் போடப்பட்டிருந்த நிலையில் அங்கு திடீர் திருப்பமாக ஒரு நிகழ்வு நடந்தது.
லிஃப்ட் ஆப்ரேட்டரை அழைத்து தனக்கு பதில் புதிய லிஃப்டை துவக்கி வைக்குமாறு அமைச்சர் பி.டி.ஆர். கேட்டுக்கொண்டது எம்.ஜி.ஆர். கால நிகழ்வுகள் சிலவற்றை சிந்திக்க வைக்கிறது.

எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது பெரும்பாலான பாலங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் திறப்பு விழாவில் கட்டிடம் கட்டிய கொத்தனாரையோ அல்லது மேஸ்திரியையோ அழைத்து அதனை திறந்து வைக்குமாறு கத்திரிக்கோலை அவர்கள் கைகளில் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துவிடுவார். அப்படித்தான் குளித்தலை-முசிறி இடையே காவிரி பாலத்தில் கட்டப்பட்ட பாலத்தை கூட அந்தப் பாலக் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட கொத்தனார் ஒருவரை அழைத்து திறந்து வைக்க வைத்தார்.
|
பாழடைந்த லிஃப்ட்
இந்நிலையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் செயல்பாடுகளும் அதையொட்டி அமைகின்றன. மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது, வெற்றிச் சான்றிதழை பெறுவதற்காக கடந்த மே மாதம் சென்றிருக்கிறார். அப்போது மாடிக்கு செல்ல வேண்டிய லிஃப்ட் மிகவும் பாழடைந்த நிலையில், இழுக்கவே மிகவும் திணறியிருக்கிறது. அப்போது இது குறித்து பி.டி.ஆரிடம் முறையிட்ட லிஃப்ட் ஆப்ரேட்டரான மூதாட்டி, ''ரொம்ப வருஷமா இங்கு லிஃப்ட் ஆப்ரேட்டராக இருக்கிறேன். உயரதிகாரிகள் பலரும் வந்து போறாங்க, ஆனால் யாரும் இதை சரி செய்ய விரும்பவில்லை'' எனத் தெரிவித்திருக்கிறார்.

பி.டி.ஆர். உறுதி
இதையடுத்து தனது வெற்றிச் சான்றிதழை பெற்ற கையோடு மீண்டும் அந்த பாழடைந்த லிஃப்ட் வழியே கீழிறங்கிய பி.டி.ஆர்., புதிய லிஃப்ட் அமைக்க தாம் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்திருக்கிறார். இதையடுத்து அமைச்சரானவுடன் இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து பேசி புதிய லிஃப்ட் போடுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் ஸ்ட்ரக்சரை மாற்றனும், முடியாத வேலை என சாக்குபோக்குகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

ரூ.18 லட்சம் மதிப்பு
இதையடுத்து மதுரை மருத்துவக்கல்லூரி என்பது தமிழகத்தில் ஒரு முக்கியமான இடம். இப்படிப்பட்ட இடத்தில் இது போன்ற பாழடைந்த லிஃப்ட்கள் இருந்தால் அது அரசுக்கு தானே கெட்டப்பெயர் என மீண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளை விடாது துரத்தி ஒரு வழியாக 18 லட்சம் ரூபாய் செலவில் புதிய லிஃப்ட் அமைத்துக் கொடுத்துவிட்டார். இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றிருக்கிறது. மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

நான் சொல்கிறேன்
மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் புதிய லிஃப்டை ஆப்ரேட் செய்து துவக்கி வைக்குமாறு அழைத்திருக்கிறார்கள். அப்போது இங்க வேலை செய்த மூதாட்டி எங்கே என அமைச்சர் வினவியிருக்கிறார். இதையடுத்து அவர் அமைச்சர் அருகில் வந்தவுடன், ''இந்தம்மா நீங்கள் தான் இந்த லிஃப்டை துவக்கி வைக்க தகுதியான நபர். நீங்கள் வைத்த கோரிக்கையால் தான் இந்த மருத்துவக்கல்லூரிக்கு புதிய லிஃப்டே வந்துள்ளது'' எனக் கூறியிருக்கிறார். இதற்கு அந்த லிப்ட் ஆப்ரேட்டரான மூதாட்டி தயங்க, ''நான் சொல்கிறேன் துவங்கி வைங்கம்மா'' எனக் கூறி அந்த கடைநிலை ஊழியரையும் அரசு விழாவில் அங்கீகரித்துள்ளார் அமைச்சர் பி.டி.ஆர்.












Click it and Unblock the Notifications