அஜித் குமார் விவகாரம்.. நகை திருட்டு புகார் அளித்த நிகிதா மீது பணமோசடி புகார் இருப்பது அம்பலம்!
சிவகங்கை: திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் விவகாரத்தில் நகை திருடுபோனதாக புகார் அளித்த நிகிதா என்பவர் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. 2011ஆம் ஆண்டு அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த புகாரில், முதல் குற்றவாளியாக தாய் சிவகாமி மற்றும் 5வது குற்றவாளியாக நிகிதா சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் எப்ஐஆர் நகல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். இவரை திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார், அவரை கொடூரமாக அடித்தும், மிளகாய் பொடி கொடுத்தும் துன்புறுத்தியுள்ளனர். அடிதாங்க முடியாத அஜித் குமார் மரணம் அடைந்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாகியது.

5 காவலர்கள் கைது
இதுதொடர்பாக 5 தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல் எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்றும், முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகவும் ஆறுதல் கூறினர். அதேபோல் அஜித் குமார் சகோதரர் நவீன் குமாருக்கு அரசு வேலை அளிக்கப்பட்டுள்ளது.
புகார் அளித்தது யார்?
இதனிடையே உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த சம்பவத்திற்கு காரணமான உயர் அதிகாரிகள் யார்? தனிப்படை அமைக்கப்பட்டது ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அதேபோல் 9 சவரன் நகையை காணவில்லை என்று புகார் அளித்த நிதிதா மற்றும் சிவகாமி ஆகியோரின் பின்னணி என்ன என்பது குறித்தும் கேள்விகள் எழுந்தன.
நகையை காரில் வைத்தது ஏன்?
உயர் அதிகாரிகள் தொடர்பான கேள்விக்கு சிபிஐ விசாரணை மற்றும் மதுரை மாவட்ட நீதிபதி தலைமையிலான விசாரணை அறிக்கை மூலமாக பதில் கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 9 சவரன் தங்க நகையை காணவில்லை என்று புகார் அளித்த போது, தாய் சிவகாமி மற்றும் மகள் நிகிதாவிடம், எதற்காக நகையை காரில் வைத்து சென்றீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
குற்றப்பின்னணி கொண்ட நிகிதா
அதற்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததால் நகையை கழற்றி காரில் வைத்ததாக கூறி இருந்தார். இந்த நிலையில் நிகிதா மற்றும் சிவகாமி ஆகியோர் மீது 2011ஆம் ஆண்டு பண மோசடி புகார் இருப்பது அம்பலமாகி இருக்கிறது. 2011ஆம் ஆண்டு துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் என்று கூறி அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.16 லட்சம் பணமோசடி
இந்த புகாரில் சிவகாமி முதல் குற்றவாளியாகவும், நிகிதா 5வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் மற்றும் விஏஓ வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.16 லட்சம் பெற்றுள்ளனர். அதேபோல் பணம் கொடுத்த ராஜாங்கம் என்பவருக்கு பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை, அரசுப் பணியையும் வாங்கி கொடுக்கவில்லை.
தலைமறைவாகிய குடும்பம்
அதுமட்டுமல்லாமல் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது, நிகிதா குடும்பத்தினர் தலைமறைவாகி இருக்கின்றனர். அதற்கு முன்பாக மிரட்டலும் விடுத்திருக்கின்றனர் என்பது எப்ஐஆர் மூலமாக தெரிய வந்துள்ளது. இதனால் நகையை காணவில்லை என்று நிகிதா மற்றும் சிவகாமி அளித்த புகாரின் உண்மைத்தன்மை குறித்த கேள்வி எழுந்துள்ளது.
புகார் உண்மையா?
ஏனென்றால் போலீசாரின் விசாரணையில் இதுவரை காணாமல் போனதாக கூறப்படும் 9 சவரன் நகை எங்கும் கைப்பற்றப்படவில்லை. அஜித் குமார் மீது புகார் கொடுத்த நிகிதா மற்றும் சிவகாமி ஆகியோரும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் விரைவில் நிகிதா மற்றும் சிவகாமி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications