அரசியலில் விஜய் எங்களை பின்பற்றுவதில் மகிழ்ச்சி.. இணைந்து பணியாற்ற முடியுமா? சீமான் கொடுத்த பதில்
மதுரை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன் இணைந்து பணியாற்றுவது கடினம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பெரியார் இல்லாத அரசியல் தங்களுடையது என்று கூறிய சீமான், நாதக கொடியும், தவெக கொடியும் ஒன்றுபோல் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் திமுக மற்றும் அதிமுக பலமான கூட்டணி அமைத்து களமிறங்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இதனிடையே வேதாரண்யம் தொகுதிக்கான வேட்பாளராக இடும்பாவனம் கார்த்தியை அறிவித்து, அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சீமான் பேட்டி
தற்போது சீமான் அடுத்ததாக ஆடு, மாடுகளுக்கான மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் மதுரையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எங்களுக்கு யாரும் போட்டி கிடையாது. இதுவரை நாதக ஒருமுறையும் கூட்டணி அமைத்ததே இல்லை. நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மக்கள், எங்களுடன் தான் நிற்பார்கள்.
கூட்டணி?
எங்களால் சமரசம் செய்து கூட்டணி அமைத்து தேர்தல் வெற்றியை அனுபவிக்க முடியாது. என்னால் வாக்குக்கு பணம் கொடுக்க முடியாது. நாங்கள் அப்படியல்ல. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் களத்தில் இருந்து பணியாற்றி இருக்கிறார்கள். தம்பி விஜய் முதல்வர் வேட்பாளர் என்றால், அதற்காகதானே கட்சியை தொடங்கி இருக்கிறார். அதனைதானே கட்சி முடிவாக அறிவிக்கும். இதில் வியப்பு ஒன்றும் இல்லை.
நாதக vs தவெக
என்னுடைய கட்சி கொடிக்கும், அவர்களின் கொடிக்கும் குழப்பம் வரும். இருந்தாலும் நம்மை பின்பற்றி விஜய் வருவது பெருமையும், மகிழ்ச்சிதான். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை விஜய் பேசுவது மகிழ்ச்சி தான். எங்களுடைய அரசியல் பெரியார் இல்லாதது. ஆனால் தவெகவின் கொள்கைத் தலைவராக பெரியார் இருக்கிறார். அதனை எங்களால் ஏற்க முடியாது.
விஜயுடன் இணைவீர்களா?
அதனால் விஜயுடன் இணைந்து பணியாற்றுவது கடினம். விஜய் மொழி, இனம் அரசியல் குறித்து பேச முன் வரவில்லை. ஜல்லிக்கட்டுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? மக்கள் பணத்தில் கருணாநிதிக்கு சிலை வைத்து கொண்டே போகிறார்கள்.. கீழடியில் 2 ஏக்கர் தான் ஒரு இனக்குழு வாழ்ந்திருக்கிறதா? மீதமுள்ள பகுதிகளில் ஏன் தோண்டவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
4 முனைப்போட்டி
இதன் மூலமாக சட்டமன்றத் தேர்தலில் விஜயுடன் கூட்டணி இல்லை என்பதை சீமான் மீண்டும் தெளிவுபடுத்தி இருக்கிறார். இதனால் சட்டமன்றத் தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் 8 சதவிகிதத்திற்கும் அதிக வாக்குகள் பெற்று நாதக மாநில கட்சிக்கான அந்தஸ்தை பெற்ற நிலையில், அதனை இம்முறை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications