ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போல.. எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கிண்டல் செய்த ஓபிஎஸ்!
மதுரை: எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போலத்தான் அமையும் என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக இன்று தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு நிலுவையில் உள்ளது குறித்த கேள்விக்கு, நீதிமன்றத் தீர்ப்பை தள்ளி வைத்திருக்கிறார்கள், தீர்ப்பு வந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும் எனத் தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருக்கும் நிலையில் அவர் மீதான வழக்கு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு செந்தில் பாலாஜி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சிரித்துக் கொண்டே பதில் கேள்வி எழுப்பினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை கடுமையாக விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு, பொதுவாகவே செய்தியாளர்களுக்கு தனிப்பட்ட பிரத்யேகமான உரிமை இருக்கிறது. நாட்டில் நடக்கின்ற பல்வேறு செய்திகள் மற்றும் பிரச்சனைகளை குறித்து மக்களுடைய கவனத்திற்கு கொண்டு வருவதற்கு உரிமை இருக்கிறது. இது ஜனநாயக கடமை. அதை மறுப்பது அவர்களது மனநிலையை பொறுத்தது எனத் தெரிவித்தார்.
பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், "பலமுறை எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்கின்ற உரிமையை நாடாளுமன்றத்தில் பெற்றும் அவர்களால் ஒழுங்காக வழிநடத்திச் செல்ல முடியாத சூழ்நிலை தான் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது. இதுவும் அதேபோலத்தான் முடியும். ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போலத்தான் இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டமும் அமையும்' என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications