எனக்கு யாரும் சிபாரிசு பண்ண வேண்டாம்.. ‘அம்மா’ எனக்கு சர்டிஃபிகேட் கொடுத்துருக்காங்க! ஓபிஎஸ் சுளீர்!
மதுரை: யாரிடமும் நான் என்னை அழைத்துக் கொண்டு போய் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்க்க வேண்டும் என்று சொன்னதே கிடையாது, ராஜன் செல்லப்பா இதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும், அவர் எனக்காக சிபாரிசு செய்வதாக சொல்லி இருக்கிறார், எனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை என முன்னாள் முதலமைச்சரும், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்," அதிமுகவில் இணைய வேண்டும் என்றால் ஆறு மாதம் அமைதியாக இருந்தால் பரிசீலனை செய்வோம் என ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். இந்த பிரச்சனை யாரால் உருவாக்கப்பட்டது என்று அனைவருக்கும் நன்றாக தெரியும். மக்கள் நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
புரட்சித்தலைவர் காலத்திலிருந்து அம்மா வளர்த்த சக்தி யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக மாறியுள்ள இந்த இயக்கத்தை உருவாக்கித் தந்திருக்கிறார் என்பதெயெல்லாம் எண்ணி தான் பிரிந்து கிடக்கின்ற அதிமுகவில் அனைவரும் இணைய வேண்டும் என்று தான் நான் சொன்னேன். யாரிடமும் என்னை அழைத்துக் கொண்டு போய் அவரிடமும் சேர்க்க வேண்டும் என்று நான் சொன்னதே கிடையாது.
அண்ணன் ராஜன் செல்லப்பா இதை புரிந்து கொள்ள வேண்டும். அவர் எனக்காக சிபாரிசு செய்வதாக சொல்லி இருக்கிறார். எனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை. பிரிந்திருக்கிற அதிமுக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அப்போதுதான் எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தல் வந்தாலும் திமுகவை எதிர்க்கின்ற வல்லமை சக்தி இயற்கையில் உருவாகும் என்பதை தான் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேனே ஒழிய எங்களை எல்லாம் சிபாரிசு செய்யும் தோணியில் அவர் பேசி இருக்கிறார். யாரிடமும் நாங்கள் எங்களை அழைத்துக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று சொன்னதில்லை சொல்லவும் மாட்டோம்.
ரவீந்திரநாத் யார் என்று எனக்குத் தெரியாது என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். உதயகுமாருக்கு பதில் சொல்வதில்லை என்று நான் சொல்லிவிட்டேன். டாக்டர் வெங்கடேசன் அவர்கள் பாசறையில் மாநிலச் செயலாளராக இருந்தபோது என் மகன் ரவீந்திரநாத்தையும், ஜெயபிரதிப்பையும் அழைத்து யாராவது ஒருவரை தேனி மாவட்டத்தில் மாவட்ட செயலாளராக போடுகிறேன் என்று சொன்னார். எனது மகன் என்னிடம் வந்து சொன்னார், அப்படியா என்று கேட்டு நான் டாக்டர் வெங்கடேசனை சந்தித்தபோது வெங்கடேசன் எந்த சோபாவில் அமர்ந்திருந்தார்.
அப்போது உதயகுமார் எப்படி இருந்தார் என்று சொன்னால் அரசியல் நாகரிகமாக இருக்காது. டாக்டர் வெங்கடேசனிடம் தயவு செய்து எனது மகனை யாரும் மாவட்ட செயலாளர் பதவிக்கு போட வேண்டாம் என்று சொன்னேன். ஏனென்றால் வாரிசு அரசியல் என்று சொல்வார்கள் எதிர்க்கட்சிகள். வாரிசு அரசியல் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். டாக்டர் வெங்கடேசன் அம்மாவிடம் சென்று பன்னீர் செல்வத்தின் மகனை மாவட்ட செயலாளராக போட வேண்டும் என்று சொல்லியுள்ளார் அம்மாவும் ஏன் வேண்டாம் என்று சொல்கிறார் போடுங்கள் எதுவும் பிரச்சனை இல்லை என்று சொன்னார்.
அம்மாவே சொல்லிவிட்டார் என்று அவர் சொன்னார் நான் மீண்டும் அம்மாவிடம் நேரடியாக சந்தித்தபோது வெங்கடேசன் மாவட்ட செயலாளர் பதவி தருவதாக சொல்கிறார் என்று சொன்னேன். வெங்கடேசன் சொல்லவில்லை நான் தான் சொன்னேன் என்று அம்மா சொன்னார். ஆக 2008 காலத்தில் நான் தான் பன்னீர் செல்வத்தின் மகனுக்கு மாவட்ட செயலாளராக போடுவதற்கு உத்தரவிட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.
அம்மாவிற்கு அடையாளம் தெரிந்தால் போதும் உதயகுமாருக்கு தெரிய தேவையில்லை. எப்படி சொல்வது என்று புரியவில்லை அவர் எப்படி வந்தார் என்பதெல்லாம் மதுரையில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும். அம்மாவே உத்தரவு போட்டதற்கு பின்னால் யாருடைய சுபாரிசும் தேவையில்லை. இனிமேல் உதயகுமார் எங்களை பற்றி பேசுவதை நிறுத்திவிட வேண்டும்.
உறுதியாக சுற்றுப்பயணம் சென்று தொண்டர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இரட்டை இலையை எதிர்த்து நான் போட்டியிடும் சூழல் யாரால் எப்படி உருவாக்கப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும் என்னுடைய தொண்டர் பலத்தை நிரூபிப்பதற்காக நான் நிற்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. என்னை தோற்கடிப்பதற்காக ஆறு பன்னீர் செல்வத்தை தேடி கண்டுபிடித்து அங்கு கொண்டு வந்து நிறுத்தினார். என்ன ஆனது யார் டெபாசிட்டை இழந்தது. இரட்டை இலையும் டெபாசிட் இழந்தது. இவர் கொண்டு வந்து நிறுத்தியவர்களும் டெபாசிட் இழந்தனர். அதற்கு முழு காரண கர்த்தா உதயகுமார் என்பதை நான் சொல்லிக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் யார் வீட்டு வாசலிலும் நிற்கவில்லை அனைவரும் இணைய வேண்டும். புரட்சித்தலைவர் மறைவிற்குப் பிறகு இரண்டு அணிகளாக பிரிந்ததால் தோல்வி அடைந்தோம் அதற்கு மறுநாளே தலைவர்கள் சேர்வதற்கு முன்பாக தொண்டர்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள் அதை பார்த்துதான் தலைவர்களே சேர்ந்தார்கள். எனவே ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. எந்த தேர்தலிலும் இணையாமல் வெற்றி பெற முடியாது என்பது தான் மக்களின் தீர்ப்பாக இருந்திருக்கிறது ஒற்றை தலைமை வந்தால் உறுதியாக பழனிசாமி தலைமையில் முழு வெற்றியை பெறுவோம் என்று அனைத்து தேர்தலிலும் தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள் பிரிந்திருந்த காரணத்தினால்.
தலைவர் காலத்திலேயே அவர் மாவட்ட செயலாளர், ஒன்பது முறை சட்டமன்ற தேர்தலில் நின்று ஏழு முறை வெற்றி பெற்று இருக்கிறார் மக்களிடம் நல்ல பேரை வாங்கி இருக்கிறார். எந்த வேலையாக இருந்தாலும் தனது பணியை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறார் என்பது அவருக்கான நல்ல பெயர். அவருக்கு மனஸ்தாபம் என்னவென்றால் இந்த இயக்கத்தை உருவாக்கியவர் புரட்சித்தலைவர் மாபெரும் இயக்கமாக்கியவர் அம்மா இருவரின் படங்கள் இல்லை என்று சொன்னால் தொண்டர்களும் வெதும்பி விடுவார்கள். எங்களுக்கும் அந்த மனக்குமுறல் உள்ளது.
எங்கள் ஊரில் ஒரு போஸ்டரை பார்த்தேன் திமுகவில் காசு வாங்கி வந்தவர் தற்போது தேனியில் ஒரு பகுதியில் மாவட்ட செயலாளராக உள்ளார். அவர் புகைப்படத்தை பெரிதாக போட்டு விட்டு எடப்பாடி புகைப்படத்தை அவர் காலுக்கு கீழ் போட்டு இருக்கிறார்கள்." என கூறினார்.












Click it and Unblock the Notifications