ஆவின்.. ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா பதவி பறிப்பு.. ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு.. பரபரப்பில் தேனி
மதுரை: தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டது, ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஓ.ராஜா தலைவராகவும், மேலும் 17 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பழனிசெட்டிபட்டி சேர்ந்த அமாவாசை என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ராஜா மற்றும் 17 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். விதிமுறைகளை பின்பற்றாமல் அவசரகதியில் ஓ.ராஜாவும், 17 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். எனவே இந்த நியமனம் ரத்து செய்யப்படவேண்டும் என்று தனது மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக செயல்பட ஓ.ராஜாவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் நிர்வாகக் குழுவும் செயல்பட இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.
நம்ம இடத்திற்கு பிரச்சனை வரும்.. இப்போதே எதிர்ப்போம்.. ரஜினியை அதிமுக கண்டிக்க இதுதான் காரணம்!?
இந்த உத்தரவு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியானது. ஆனால், இந்த உத்தரவை ஆவின் சார்பில் எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஓ.ராஜா மற்றும் 17 பேர் நியமனம் செல்லாது என்று இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தேனி மாவட்ட ஆவின் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.