பரமக்குடி பெண்ணுக்காக நின்ற மதுரை கோர்ட்! வயதானவர் என்பதற்காக சலுகை கிடையாது, பெண்கள் அடிமை கிடையாது
மதுரை: பரமக்குடியை சேர்ந்த இந்திரா தன்னுடைய கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துபவதாக வழக்கு தொடர்ந்திருந்தார்.. அந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து கணவரை குற்றமற்றவர் எனக்கூறி விடுதலை செய்தது.. உடனே இந்திரா மதுரை ஹைகோர்ட்டுக்கு அப்பீலுக்கு சென்றார்.. இந்த வழக்கை விசாரித்த மதுரை ஹைகோர்ட் வழங்கியிருக்கும் தீர்ப்பானது, ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் பெற்று வருகிறது.
குற்றவாளி முதியவர் என்பதற்காக மட்டும் தண்டனையில் சலுகை கோருவதை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் இந்திரா.. இவர் தன்னுடைய கணவர் தனசீலன் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்துவதாக கூறி, கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
தண்டனையை உறுதி செய்யுங்கள்
அந்த மனுவில், "தனசீலன் தன்னுடைய மருமகளுடன் தவறான உறவு வைத்திருக்கிறார்.. அதை தட்டி கேட்டதால் என்னை தாக்கி, உணவு வழங்காமல், முறையாக பராமரிக்காமல், மத வழிபாடு செய்ய அனுமதிக்காமல் தனிமைப்படுத்திவிட்டார்" என்றெல்லாம் புகார் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், தனசீலனுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்தது. இதையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து தனசீலன் பரமக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் அப்பீலுக்கு போனார்..
அவரது மேல்முறையிட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் நேரடி சாட்சிகள் இல்லை என்று சொல்லி தனசீலனை குற்றமற்றவர் என்று விடுவித்தது.
உடனே இந்திரா, இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரை ஹைகோர்ட்டுக்கு சென்றார்.. இந்திராவின் வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, "இந்திய மரபில் திருமணம் என்பது, நீண்ட காலம் நீடிக்கும் புனித உறவாகவும், பொறுமை மற்றும் பிணைப்பால் புனிதமாக்கப்பட்ட உறவாகவும் கருதப்படுகிறது.
சகிப்புத்தன்மை அடிமைத்தனம் கிடையாது
திருமணத்தின் புனிதம் ஒரு தலைப்பட்சமான அடக்குமுறை அல்லது அமைதியான துன்பத்தை தாங்கிக்கொள்வதில் இல்லை. திருமண உறவின் உண்மையான சாராம்சம் பரஸ்பரம், மரியாதை, நட்பு மற்றும் கருணையில் மட்டுமே அடங்கியிருக்கிறது.
இந்த வழக்கை பொறுத்தவரை வயது முதிர்ந்த பெண், தன்னுடைய குடும்ப மரியாதையையும், திருமண புனிதத்தையும் காக்க வேண்டும் என்ற பேரில் வாழ்நாள் முழுவதும் அவமதிப்பு, இழிவு மற்றும் புறக்கணிப்பை தாங்கி இருக்கிறார்.
சகிப்புத்தன்மை தங்களது கடமை என்ற எண்ணத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் நடக்கும் துன்புறுத்தல்களை அமைதியாக சகித்துக் கொண்ட தலைமுறையை சேர்ந்த இந்திய பெண்களின் பிரதிநிதியாக மனுதாரர் இருக்கிறார்.
அவரின் தாங்குதலை சமூகம் பெருமையாக பேசுவதால் தலைமுறை தலைமுறையாக ஆண்கள், தந்தைமயம் பெயரில் ஆதிக்கம் செய்ய தைரியம் பெற்றிருக்கின்றனர்.
துன்புறுத்தலில் முதிய பெண்கள்
இந்த ஆண்கள் திருமணம் அவர்களுக்கு அதிகாரத்தை அளிக்கிறது என்ற நம்பிக்கையை விட்டு விலகி, தங்கள் மனைவியின் நலன், பாதுகாப்பு, தேவைகள் மற்றும் மரியாதை ஆகியவை திருமண உறவின் முக்கிய பொறுப்புகள் என்பதை உணர வேண்டிய காலம் வந்துவிட்டது. இப்படி சொந்த வீட்டிலேயே முதிய பெண்கள் இந்த துன்புறுத்தல் மற்றும் புறக்கணிப்பை எதிர்கொள்வதை, இந்த கோர்ட் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது.
இந்த வழக்கில் 80 வயது மதிக்க கணவனை தண்டிக்க வேண்டும் என மனைவி கோருவது பழிவாங்கும் செயல் கிடையாது. திருமண உறவு என்ற பெயரில் அவமரியாதைக்கு நியாயமான விளக்கத்தை வழங்க முடியாது என்ற அடிப்படை நியாயத்தை உறுதிப்படுத்தும் செயலாகும். துன்புறுத்தல் என்பது தொடர்ச்சியான அவமதிப்பு, புண்படுத்துதல், புறக்கணிப்பு ஆகியவற்றை குறிக்கும்.
இது மனைவியின் மன அமைதி மற்றும் மரியாதை உணர்வை அழிக்கிறது. இந்த வழக்கில் அவை பொருந்தும். இது வெறும் சொத்து பிரச்சனையோ, துன்புறுத்தல் பிரச்சனையோ இல்லை என்று வாதிடுவதை ஏற்க இயலாது.
திருமண உறவின் சாராம்சம்
கணவன், "குடும்பம்" எனும் பெயரில் தன் புதிய மனைவியை தனிமைப்படுத்தி, உணவையும், உடனிருப்பையும், மரியாதையையும் பறித்து விட்டால் அது துன்புறுத்தல் என்ற வரம்பையும் தாண்டி விடுகிறது. ஒவ்வொரு துன்புறுத்தலுக்கும் தனித்தனி ஆதரவு சாட்சி வேண்டும் என கேட்பது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தவறு.
திருமண உறவின் உண்மையான சாராம்சம் பரஸ்பரம், மரியாதை, நட்பு மற்றும் கருணையில் உள்ளது. திருமணத்தின் புனிதம் என்பது அடக்குமுறை அல்லது துன்பத்தை அமைதியாக தாங்கிக்கொள்வதில் இல்லை. துன்புறுத்தலின்போது அமைதியாக இருப்பதன் பெயர் சகிப்புத்தன்மை கிடையாது, அது அடக்குமுறையை நிலைநாட்டும் அடிமைத்தனம்.
தவறான நடத்தை - முகமூடி சட்டம்
வீட்டுக்குள் நடக்கும் துன்புறுத்தல்கள் பல நேரங்களில் 4 சுவர்களுக்குள் மட்டுமே நடப்பவையாக இருக்கும். ஒவ்வொன்றுக்கும் நேரடி சாட்சி வேண்டும் என்று சொல்வது அந்த சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும்.
குற்றவாளியின் வயது அவரது தவறான நடத்தையை புனிதமாக்காது. குற்றவாளி முதியவர் என்பதற்காக மட்டும் தண்டனையில் சலுகை கோருவதை ஏற்க முடியாது. மாறாக வயது முதியவர் என்றால் அதிகமான பொறுப்புதான் உள்ளது. துன்புறுத்தல் குடும்பம், மரியாதை என்ற பெயரில் மறைந்திருக்கும்போது அந்த முகமூடியை சட்டம் அகற்ற வேண்டும்.
முதியவர் என்பதற்காக சலுகை இல்லை
எனவே, இந்த வழக்கில் குற்றவாளியை விடுதலை செய்த முதல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பினை ரத்து செய்வதுடன், மனுதாரரின் கணவர் குற்றவாளி என்றும் தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே ஏற்கனவே கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டபடி 6 மாதங்கள் சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும்.
குற்றவாளி இப்போது 85 வயதை கடந்து விட்டார் என்பதை நீதிமன்றம் உணர்கிறது. இருந்தாலும், வயதின் காரணத்தால் மட்டும் குற்ற பொறுப்பிலிருந்து விடுபட்டு விட முடியாது. அவரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்கள் அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் மன உளைச்சலையும், அவமதிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த துன்பத்தையெல்லாம் பல வருட காலமாகவே அமைதியாகவே மனைவி தாங்கி வந்துள்ளார்.
சிறையில் அடைக்க உத்தரவு
எனவே, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மாற்றவும், குறைக்கவும் தேவையில்லை... குற்றவாளியை கைது செய்து மீதமுள்ள தண்டனையை அனுபவிக்கும் வகையில் சிறையில் அடைக்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இந்திய பெண்களின் தாங்கும் திறன் குறிப்பாக பழைய தலைமுறை பெண்களின் பொறுமை நற்குணமாக புகழப்படுகிறது.. அதற்காக, அநீதிக்கு உடன்பட்டதாகவே கருதப்படும். பெண்களிடமிருந்து சட்டம் தியாகத்தையும், துன்பத்தையும் நீதிமன்றம் எதிர்பார்ப்பதில்லை" என்று நீதிபதி தீர்ப்பளித்ததுடன், 8 வாரங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு இந்த வழக்கையும் முடித்து வைத்தார்
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications