மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஓ.பி ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக எம்.பிக்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை: தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேனி லோக்சபா தொகுதி எம்.பியும் ஓபிஎஸ் மகனுமான ஓ.பி. ரவீந்திரநாத்தும், விருதுநகர் லோக்சபா தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவித்தது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்டப் பணிகளான சாலை, சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகள், 2019 ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
எய்ம்ஸ் மருத்துவமனைக்காகத் தோ்வு செய்யப்பட்ட இடத்தில், 5.5 கிலோ மீட்டருக்கு சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பதியில் உள்ள எஸ்.வி. மருத்துவ கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக எம்.பிக்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த உறுப்பினர் பொறுப்புக்கு 3 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் மதுரை லோக்சபா தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் விலகிக்கொண்டார். இதையடுத்து தற்போது ஓபிஎஸ் மகன் ஓ.பி ரவீந்திரநாத் குமார் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகிய இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.