மதுரை ஹைகோர்ட் அதிரடி.. பெண்களுக்கு திறந்தவெளி சிறைச்சாலை.. தமிழக அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும்
மதுரை: பெண் கைதிகளுக்கு திறந்தவெளி சிறை அமைக்கக் கோரிய வழக்கில், மதுரை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது. இதுகுறித்து தமிழக உள்துறை செயலர் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருக்கிறது. என்ன காரணம்?
மதுரை மாவட்டத்தை சோ்ந்தவர் கே.ஆா்.ராஜா.. இவர் கடந்த 2018ல், பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.. அந்த மனுவில் சில கோரிக்கைகளை முன்வைத்து கேட்டுக் கொண்டிருந்தார்.

சப் ஜெயில்கள்: பொது நல மனுவில், "தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 சிறப்பு பெண்கள் சிறை, 9 மாவட்ட சிறை, 95 சப்-ஜெயில்கள், 3 திறந்தவெளி சிறை, பெண்களுக்கான 3 சப்-ஜெயில்கள், 12 இளஞ்சிறார் சிறைகள் உள்ளன. இவற்றில் 4 ஆயிரத்து 966 தண்டனை கைதிகளும், 9 ஆயிரத்து 156 விசாரணை கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஆண் கைதிகளுக்கு பல்வேறு சிறைகள் இருந்தபோதும், 3 திறந்தவெளி சிறைகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை கொண்ட கைதிகளை திறந்தவெளி சிறைக்கு மாற்றுகின்றனர். இங்குள்ள கைதிகள் மனரீதியான முன்னேற்றம் அடைகின்றனர். அங்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.
பெண் கைதிகள்: இதனால் அவர்கள் தண்டனை காலம் முடிவடைந்து வெளியில் வரும்போது நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது. ஆனால் இந்த வசதி பெண் கைதிகளுக்கு இல்லை. திறந்தவெளி சிறை அமைக்க வேண்டும் என்று உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆகியோருக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே பெண் கைதிகளுக்கு திறந்தவெளி சிறை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
சிறை விதிகளின்படி திறந்தவெளி சிறையில் பெண் கைதிகளை அடைக்க அனுமதியில்லை என்று கூறப்பட்டுள்ளது.. எனவே, இந்த விதியை ரத்து செய்து, பெண் கைதிகளுக்கு திறந்தவெளி சிறை அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
மறுபரிசீலனை: இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, பெண் கைதிகளை திறந்தவெளி சிறைகளில் அடைக்க அனுமதிக்க முடியாது என்ற சிறைத்துறை விதியை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, பெண் கைதிகளை திறந்தவெளி சிறைகளில் அடைக்க அனுமதித்து தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டில் அரசாணை வெளியிட்டது.
இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் ஆகியோா் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "மனுதாரரின் கோரிக்கைப்படி, பெண் கைதிகளை திறந்தவெளி சிறைகளில் அடைக்க அனுமதி அளித்து தமிழக அரசு ஏற்கெனவே அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே, இதில் வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை.
அதிரடி உத்தரவு: பெண் கைதிகளுக்கு திறந்தவெளி சிறை அமைப்பது குறித்து தமிழக உள்துறைச் செயலா், வல்லுநா் குழுவின் கருத்துகளைக் கேட்டறிந்து அதனடிப்படையில் உரிய முடிவு எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது" என்றனா்.












Click it and Unblock the Notifications