ஒரே காரில் ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன்.. அடுத்து சசிகலாவுடன் சந்திப்பு! புதிய அணிக்கான அச்சாரமா?
மதுரை: தேவர் ஜெயந்தி விழாவன்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், செங்கோட்டையன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் ஒன்றாக பசும்பொன் பயணித்து வருகின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூவரணி அமைவதற்கான அச்சாரமாக இன்றைய நாள் அமைந்துள்ளது. இதனால் அதிமுகவுக்கு கூடுதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே பாஜக தலைமையிலான கூட்டணி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இணைந்தனர். இதனால் தென் மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன்பின் கடந்த மாதத்தில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினர்.

அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலகக்குரல் எழுப்பினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி 10 நாட்கள் கெடு விதித்தார். செங்கோட்டையனின் இந்த முயற்சிக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் வகித்து வந்த அத்தனை பதவிகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதன்பின் செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து ஒரு மாதமாக அமைதியாக இருந்த செங்கோட்டையன், இன்று திடீரென ஓபிஎஸ்ஸை சந்தித்துள்ளார்.
மதுரை வந்த செங்கோட்டையன், ஓபிஎஸ் உடன் ஒரே காரில் பசும்பொன் பயணித்து வருகிறார். பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர். இதனிடையே மானாமதுரை அருகே ஓபிஎஸ் - செங்கோட்டையன் பயணித்த கார் நிறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் டிடிவி தினகரனுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தனியாக புதிய அணியை உருவாக்குவதற்கான அச்சாரம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்கள் மூவரும் பசும்பொன் சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் வகையில், தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அலை இன்னும் தீவிரம் அடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் பசும்பொன்னுக்கு மூவரும் ஒன்றாக செல்லும் பட்சத்தில், பின்னர் சசிகலாவையும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதனால் இன்னும் சில நாட்களில் அரங்கேற உள்ள அரசியல் புயலுக்கான ஒத்திகையாக இவர்களின் சந்திப்பு அமையலாம் என்றும் கருதப்படுகிறது. இதனை எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications