பிரதமர் பெயரில் விளம்பரப் பிராண்டிங்! இதை திருத்தாமல் விடக்கூடாது! பழனிவேல் தியாகராஜன் பாய்ச்சல்!
மதுரை: மத்திய அரசின் திட்டங்கள் என்ற பெயரில் பிரதமரை மக்கள் மத்தியில் பிராண்டிங் செய்யும் வேலைகள் நடந்து வருவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.
பிரதான் மந்திரி என்ற பெயரில் தொடங்கும் திட்டங்களில், மத்திய அரசின் பங்களிப்பைக் காட்டிலும் மாநில அரசின் பங்களிப்புத் தொகை தான் அதிகம் என்ற விவரத்தை அவர் வெளியிட்டார்.
இது போன்ற போக்கை திருத்தாமல் விடக்கூடாது என்றும் இது தொடர்பாக முதலமைச்சரிடம் கூட தாம் ஏற்கனவே பேசியிருப்பதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரையில் அமைச்சர்
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசு மீதும் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் பற்றியும் காட்டமாக பேசினார். ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்ட 2 எய்ம்ஸ் மருத்துவமனை கிளைகளில் ஒன்று திறக்கப்பட உள்ளதாகவும் மற்றொன்றில் செங்கல்லில் அடிக்கல் நாட்டியதோடு நிற்பதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் மத்திய அரசு ஒன் சைட் கேம் விளையாடுவது புரிவதாக அவர் தெரிவித்தார்.

விளம்பரப் பிராண்டிங்
மேலும், மத்திய அரசின் திட்டங்கள் என்ற பெயரில் பிரதமரை மக்கள் மத்தியில் பிராண்டிங் செய்யும் வேலைகள் நடந்து வருவதாகவும் பிரதான் மந்திரி என்ற பெயரில் தொடங்கும் திட்டங்களில், மத்திய அரசின் பங்களிப்பைக் காட்டிலும் மாநில அரசின் பங்களிப்புத் தொகை தான் அதிகம் எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். மக்களுக்காக மத்திய அரசு திட்டங்களை தீட்டாமல் அரசியலுக்காக விளம்பரங்களை மட்டும் செய்து வருவதாக தெரிவித்தார்.

புள்ளி விவரம்
மத்திய அரசின் இது போன்ற போக்கை திருத்தாமல் விடக்கூடாது என்று கூறிய அவர் இது தொடர்பாக முதலமைச்சரிடம் கூட தாம் ஏற்கனவே பேசியிருப்பதாகவும் தெரிவித்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். பணத்தை வைத்து பல வழிகளில் மத்திய அரசு அரசியல் செய்து வருவது தெளிவாக புரிவதாக கூறிய அவர் மாநில அரசு செலுத்தும் வரியின் விகிதத்தையும் மத்திய அரசு பகிர்ந்தளிக்கும் நிதியின் விகிதம் பற்றியும் பட்டியலிட்டார்.

மாதம் ரூ.1,000
இதனிடையே செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு புறப்பட்ட அமைச்சரிடம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் தமிழகத்தில் எப்போது நடைமுறைக்கு வரும் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், இது தொடர்பாக பலமுறை பதிலளித்தும் திரும்ப திரும்ப அதைக் கேட்பது ஏன் எனக் கேட்டு பதிலளிக்க மறுத்துவிட்டார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.












Click it and Unblock the Notifications