கரகாட்டம் -ஒயிலாட்டம் -மயிலாட்டம்! 10,000 பொங்கல் பானைகள்! 22 மேடைகள்! மோடி மதுரை விசிட் ஸ்பெஷல்!
மதுரை: பிரதமர் மோடி ஜனவரி 12-ம் தேதி மதுரை வருவதை ஒட்டி நகரையே திருவிழாக் கோலத்தில் ஜொலிக்க வைக்க பாஜகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
மதுரை மண்டேலா நகரில் உள்ள மைதானம் ஒன்றில் பத்தாயிரத்து எட்டு குடும்பங்கள் பொங்கல் வைக்கும் நிகழ்வும், 22 மேடைகளில் கரகாட்டம், ஒயிலாட்டம் என கிராமப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கின்றன.
இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாநகர் மாவட்ட பாஜக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் செய்து வருகிறார்.

மோடி வருகை
தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக ஜனவரி 12-ம் தேதி விருதுநகர் வருகிறார் பிரதமர் மோடி. முன்னதாக மதுரை விமான நிலையத்திற்கு வரும் அவர், அங்கு மண்டேலா நகரில் தமிழக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்படும் பொங்கல் விழாவில் பங்கேற்க இருக்கிறார். இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளதால் இரவு பகலாக பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.

22 மேடைகள்
மொத்த 22 மேடைகள் அமைக்கப்பட்டு அதில் ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், என கிராமப்புற கலைகளை பிரதமர் மோடி பார்வையிடும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதேபோல் மொத்தம் பத்தாயிரத்து எட்டு பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கும் முன்னேற்பாடுகள் தயாராகி வருகின்றன.

விவரம் இல்லை
அண்ணாமலை அளிக்கும் யோசனையின் அடிப்படையில் மதுரை மாநகர மாவட்ட பாஜக செயலாளர் டாக்டர் சரவணன் பொங்கல் விழாவுக்கான பணிகளை முன்னெடுத்து வருகிறார். இதனிடையே மதுரையிலிருந்து விருதுநகர் செல்வதற்கு முன்பாக இந்த விழாவில் பிரதமர் கலந்துகொள்வாரா அல்லது மருத்துவக் கல்லூரி திறப்பு விழா முடிந்த பின்னர் மதுரை விமான நிலையம் திரும்பும் வழியில் பங்கேற்பாரா என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

பாஜக நிர்வாகிகள்
பிரதமர் மோடி மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்துகொள்வதால் குமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை உள்ள பாஜக நிர்வாகிகள் ஜனவரி 11-ம் தேதியே மதுரையில் முகாமிட தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் மண்டல ஐ.ஜி. தலைமையிலான குழு மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. கடந்தாண்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண ராகுல்காந்தி வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications