ஆம்ஸ்ட்ராங்..கள்ளச்சாராய மரணம்! செலெக்ட்டிவ் அம்னீஷியா..சங்கியாக மாறிய கம்யூனிஸ்ட்? விளாசிய திலகபாமா
மதுரை: ஆம்ஸ்ட்ராங் கொலை, கள்ளச்சாராய மரணம் என திமுக அரசை தட்டி கேட்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள் சங்கீகளாக மாறிவிட்டீர்களா ? என்று கேட்கும் அளவிற்கு செயல்படுகிறீர்கள் என மதுரை எம்பி சு.வெங்கடேசனை பாமக மாநில பொருளாளர் திலகபாமா விமர்சித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா மதுரை வந்திருந்தார். பின்னர் அழகர் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர்," மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு எதிராக பேசுவதாக நினைத்துக்கொண்டு அவமரியாதையாகவும் தமிழ் மன்னர்கள் குறித்து தரக்குறைவாகவும் பேசியுள்ளார்.
எழுத்தாளருக்கு வரலாறு தெரியவில்லை போல.. பெண்களை அந்தப்புரத்தில் வைத்திருக்கும் மன்னர்களை தான் அவர் தெரிந்து வைத்திருப்பார் போல. சு.வெங்கடேசனுக்கு செலெக்ட்டிவ் அம்னீஷியா இருப்பது போல செயல்படுகிறார். எத்தனை மன்னர்கள் தமிழ் வரலாற்றில் இந்த மண்ணில் மக்களுக்காக நீதி பெறுவதற்காக.., அதுவும் செங்கோல் வளைந்ததற்காக உயிரை விட்ட பாண்டிய மன்னன் இருந்த இந்த மதுரை மண்ணிலிருந்துகொண்டு சு.வெங்கடேசன் இப்படியாக பேசியிருப்பதை வன்மையாக பாமக கண்டிருக்கிறது.
இதனை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். இன்று தமிழர் தேசம் கட்சி தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்கிறோம். சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக பேசப்போவதில்லை. மோடியை எதிர்த்து பேச வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளது. மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பேசாமல் பொதுகூட்டம் மேடை போல நாடாளுமன்றத்தில் பேசுகிறார்கள்.
விக்கிரவாண்டி தேர்தல் புதிய சரித்திரத்தை கொண்டு வரும் மக்கள் பணத்தை திருப்பி கொடுக்கும் மனநிலையில் உள்ளனர். அவ்வளவு மோசமாக திமுகவின் ஆட்சி நடந்திருக்கிறது. மக்கள் வேறொரு களத்தை காண எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் விக்கிரவாண்டி அதனை நிரூபிக்கும். ஆம்ஸ்ட்ராங் கொலை நம்மை எல்லாம் பதற வைத்திருக்கிறது. சட்ட ஒழுங்கு என்னவாக இருக்கிறது என்பது மிக முக்கியமான கேள்வியாக நம் முன்னால் நிற்கிறது. ஒரு பக்கம் கஞ்சா போதைப் பொருளுக்கு எதிராக இந்த அரசால் பெயரளவிற்கு ஒன்று இரண்டு என்று திட்டங்களைத் தான் சொல்ல முடிகிறதே தவிர தமிழகத்தில் எல்லா இடத்திலும் எல்லா போதை பொருட்களும் கிடைக்கின்றது.
இந்த மூன்று ஆண்டுகளில் இதற்கு முன்பாக இருந்ததை விட பன்மடங்கு போதைப்பொருள் நடமாட்டம் உயர்ந்திருக்கிறது. இதனால் நடைபெறும் மரணங்கள் அதிகரித்திருக்கிறது. மது குடித்துவிட்டு தெருவில் விழுந்து இறந்து கிடக்கிறார்கள் அதையெல்லாம் மதுவால் இறந்த மரணமாக கருதவில்லை. ஆனால் அரசின் அலட்சியத்தால் அராஜகத்தால் இவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களால் காய்ச்சி வசூல் பண்ணுவதற்காக அனுமதிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தால் 63 பேர் உயிரிழந்தவர்களுக்கு பணத்தை கொடுத்து வாயை அடைகிறார்கள்.
இந்த மாதிரியான போக்குகளில் தான் தமிழக அரசு இருக்கிறது. திமுக இதனை கொண்டாடி கொண்டிருக்கிறது. சு.வெங்கடேசன், ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக எதிர்த்து பேச வேண்டிய, கள்ளச்சாரய விவரத்தை எதிர்த்து பேச வேண்டிய திமுக அரசை தட்டி கேட்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சி நீங்கள் சங்கிகளாக மாறிவிட்டீர்களா ? என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறீர்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். மதுரை மண்ணிலிருந்து செங்கோலுக்கு எதிராக நீங்கள் இப்படி பேசி இருக்கக் கூடாது" என்றார்.












Click it and Unblock the Notifications