திருப்பரங்குன்றத்தின் மலை உச்சியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார்! 24X7 கண்காணிப்பு!
மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏன் என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.
திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது. அந்த வளாகத்தில்தான் கோயில் நிர்வாகம் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று மகா தீபம் ஏற்றி வருகிறது. ஆனால் அங்குள்ள தூணில்தான் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என இந்து முன்னணி அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் கார்த்திகை மாதம் கடந்த 16 ஆம் தேதி பிறந்ததை அடுத்து அன்றைய தினம் மலை உச்சியில் உள்ள தூணில் யாரோ சிலர் அத்துமீறி நுழைந்து தீபத்தை ஏற்றியதாக தெரிகிறது. இது குறித்து கோயில் நிர்வாகம் திருப்பரங்குன்றம் போலீஸுக்கு புகார் செய்தது.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இந்து முன்னணியை சேர்ந்த சண்முகவேல், அரசு பாண்டி, பிரசாந்த், சூர்யா ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் செல்வக்குமார், சரவணன் ஆகிய இருவரை தேடி வருகிறார்கள்.
இதனிடையே திருப்பரங்குன்றம் முருகன் கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன் உத்தரவின்பேரில் மலை உச்சியில் உள்ள தூணை சுற்றி மூங்கில்களால் பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மதுரை மாநகர உதவி கமிஷனர் குருசாமியின் உத்தரவின்பேரில் 16 பேர் கொண்ட ஆயுத படை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மலையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வரக் கூடிய இருபுறமும் மலை படிக்கட்டு பாதையில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் நடமாட்டம் உள்ளதா? என போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications