'கள்ள ஓட்டு போடுறாங்க'... ஹிஜாப்பை அகற்ற சொல்லி குடிபோதையில் பாஜக ஏஜெண்ட் ரகளை - போலீஸ் விசாரணை!
மதுரை: ஹிஜாப் உடை அணிந்து வாக்கு செலுத்த வரும் முஸ்லீம் பெண்களின் ஹிஜாப் உடையை அகற்ற வலியுறுத்திய பாஜக முகவர் கிரிராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் இன்று காலை 7 மணி முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
12,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஹிஜாப்
இதனிடையே அண்டை மாநிலமான கர்நாடகாவில் கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில், இந்த ஹிஜாப் சர்ச்சை இன்று தமிழ்நாட்டிலும் எதிரொலித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லீம் பெண்களை ஹிஜாபை நீக்கச் சொல்லி பாஜக பூத் ஏஜெண்ட் கூறிய விவகாரம் சர்ச்சையானது.

பாஜக பூத் ஏஜெண்ட்
அதாவது மதுரை மாவட்டம் மேலூரில் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. இதில் 8ஆவது வார்டுக்கான வாக்குச்சாவடி அல் அமீன் பள்ளியில் அமைந்துள்ளது. இங்கு பாஜக பூத் ஏஜெண்டாக இருந்த கிரிராஜன் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்தார். பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜனின் இந்த கருத்துக்கு அங்கிருந்த திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பூத் ஏஜெண்டகளும், தேர்தல் அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மீண்டும் நுழைய முயற்சி
இதையடுத்து கிரிராஜன் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். பாஜக சார்பில் மற்றொருவர் பூத் ஏஜெண்டாக நியமிக்கப்பட்டு, சுமார் 30 நிமிட தாமதத்திற்குப் பின்னர் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணமாக அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இதனிடையே ஏற்கனவே வெளியேற்றப்பட்ட கிரிராஜன் மீண்டும் வாக்குப்பதிவு மையத்தில் நுழைய முயன்றதாகப் புகார் எழுந்தது.

சர்ச்சை பேச்சு
அங்கு மீண்டும் வாக்குச்சாவடிக்குள் நுழைந்த கிரிராஜன், ஹிஜாப் உடையில் அணிந்து வருபவர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக கள்ள ஓட்டு செலுத்த வருவதாகவும் இதனால் அவர்கள் ஹிஜாப் உடையை அகற்ற வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாஜக முகவர் கிரிராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்
பாஜக பூத் ஏஜெண்ட் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், மத அடையாளங்களுடன் வாக்குப் பதிவு மையத்திற்கு வரக்கூடாது என எந்த நிபந்தனையும் இல்லை என்று மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இது தொடர்பாக மாநில ஆட்சியரிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது.

போதையில் ரகளை
கிரராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கிரிராஜன் குடிபோதையில் இருந்ததாகவும் அவர் மீது ஏற்கனவே பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்திய வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்த பின்னர், கிரிராஜன் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications