இடுப்பில் மது பாட்டில்.. மோடி போதை ஒழிப்பு பற்றி பேசிய NDA பொதுக்கூட்டத்திலேயே.. இதென்ன சோதனை?
மதுரை: மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற என்.டி.ஏ பொதுக்கூட்டத்திற்கு வந்த தொண்டர்களிடம் போலீசார் தீவிர சோதனை நடத்தியே அனுமதித்தனர். கூட்டத்துக்கு வந்த பலர், பாக்கெட்டில், மது பாட்டில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க, தமிழக அரசியல் களம் பரபரப்பாக மாறி வருகிறது. ஆளுங்கட்சியான திமுக, கூட்டணியை பலப்படுத்தி வரும் நிலையில், எதிர்தரப்பில் இருக்கும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி திமுகவை வீழ்த்த தீவிரமாகத் தயாராகி வருகிறது. பிரச்சாரம், பொதுக்கூட்டம் என பரபரத்து வருகிறது.

என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி
இந்தச் சூழலில் இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டு வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடி, நிறைவுற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்கள் மத்தியில் உரையாற்றினார். வழக்கமாக இந்தியில் பேசும் பிரதமர், இன்றைய பொதுக்கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசினார்.
தீவிர சோதனை
என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த தொண்டர்கள் போலீசாரின் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். போலீசார், தீவிர சோதனை செய்து, தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். அப்போது தொண்டர்கள் சிலர் மது பாட்டில்களை பாக்கெட்களிலும், இடுப்பில் சொருகியும் வைத்திருந்தனர். அவர்களிடம் இருந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மது பாட்டில்கள்
மேலும், பலர், பீடி, சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களையும் வைத்திருந்தனர். பலர் ஸ்க்ரூ டிரைவர், ஊசி, தீப்பெட்டி போன்ற பொருட்களையும் வைத்திருந்தனர். அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தபிறகே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். பிரதமர் மோடி இந்தக் கூட்டத்தில் மதுபானம், போதைப் பொருட்களை ஒழிப்பது பற்றிப் பேசினார். மோடி இப்படி பேசிய இதே கூட்டத்தில், அந்தக் கூட்டணியின் தொண்டர்கள் பலரே போதைப் பொருட்களுடன் வந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
போதை ஒழிப்பு பற்றி பேசிய மோடி
இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, "போதைப்பொருள்கள் அதிகரித்துள்ளன. மதுபானத்தால் குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன. நாங்கள் பதவிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்துவோம். குற்றவாளிகளும் போதைப்பொருள் மாஃபியாக்களும் சிறைகளில் அடைக்கப்படுவார்கள். பாதுகாப்பு, கண்ணியம், அதிகாரப் பரவலாக்கத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி செய்யும்." எனத் தெரிவித்தார்.
மதுரையில் நடந்த என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை. தமிழிசை சவுந்தரராஜன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, தென்னிந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன் ஜி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications