ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் முக்கிய யோசனை
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயை தமிழக அரசு கடந்த ஆண்டு வழங்கியது. ஆயிரம் ரூபாயை கையில் ரொக்கமாக வழங்கிய நிலையில், நடப்பு ஆண்டு பொங்கல் பரிசு கொடுத்தால் அதனை வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை அளித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட ரொக்கமாக ரூ.1,000 மற்றும் கரும்பு உள்ளிட்ட பரிசுப்பொருட்களை கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. பொங்கல் பரிசுத்தொகை ரொக்கமாக பயனாளிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வருகிறது.

வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டும் பரிசுத்தொகையை அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, மதுரை ஹைகோர்ட் கிளையில் கும்பகோணத்தை சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக ஒரு கிலோ வெல்லம் வழங்கவும், பொங்கல் பரிசு தொகையாக வழங்கப்படும் 1000 ரூபாயை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் கடந்த வருடம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துவது தொடர்பாக அடுத்த ஆண்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
பொங்கல் பண்டிகை விரைவில் வர உள்ள நிலையில், இதுவரை வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொங்கல் பரிசுத்தொகையை வங்கி கணக்கில் செலுத்தவும், பரிசுத் தொகுப்பின் போது வழங்கப்படும் கரும்பு, தேங்காய் போன்ற பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு இன்று மதுரை ஹைகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொங்கல் பரிசுத்தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தலாமே? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு அரசு தரப்பில் அளித்த பதிலில், ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தும் போது, மினிமம் பேலன்ஸ் தொகை வங்கி கணக்கு இருப்பில் இல்லை என்பதற்காக வங்கியில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது எனக் கூறப்பட்டது.
இதற்கு மகளிர் உரிமைத்தொகை வங்கி வழியாக வழங்கும் போது பொங்கல் பரிசுத்தொகை வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம், வங்கி கணக்கில் செலுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications