மதுரை மீனாட்சியம்மன் கோயில் எப்படி இருந்தது? "தெய்வீக அனுபவம்" ஜனாதிபதி திரெளபதி முர்மு பதிவு!
மீனாட்சியம்மன் கோயில் அனுபவம் பற்றி ஜனாதிபதி திரெளபதி முர்மு வருகைப் பதிவேட்டில் எழுதியுள்ளார்.
மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தியது தெய்வீக அனுபவத்தை கொடுத்ததாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கருத்து பதிவிட்டுள்ளார். அதேபோல் நாட்டு மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்ததாக கூறியுள்ள திரெளபதி முர்மு, பிரம்மாண்ட கோபுரங்கள், கற்சிலைகள், கட்டிடக் கலை பற்றி வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா ஆண்டுதோறும் கோவை ஈஷா யோகா மையத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த விழாவில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனை திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து 2 நாள் பயணமாக அவர் தமிழ்நாட்டுக்கு இன்று வருகை தந்தார். ஜனாதிபதியாக தேர்வான பிறகு அவர் முதல் முதலாக தமிழ்நாட்டுக்கு இன்று வந்தார்.

மதுரையில் திரெளபதி முர்மு
டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு காலை 11.40 மணிக்கு வந்தடைந்தார். அப்போது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மேயர் இந்திராணி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட குடியரசுத் தவைர் திரெளபதி முர்மு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார்.

மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடு
பின்னர் 12 மணியளவில் அம்மன் சன்னதி வாசல் வழியாக கோயிலுக்குள் சென்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் அம்மன் சன்னதி, கொடிமரம், துர்க்கை அம்மன் சன்னதிகளில் வழிபாடு செய்த திரெளபதி முர்மு, மீனாட்சி அம்மன் கோயில் வருகைப் பதிவேட்டில் தமது அனுபவத்தை குறிப்புகளாக எழுதினார்.

தெய்வீக அனுபவம்
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு எழுதிய அனுபவ குறிப்புகள் வெளியாகியுள்ளது. மீனாட்சியம்மன் கோயில் பற்றி எழுதியுள்ள அவர், பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரம்மாண்ட கோபுரங்கள், கலைநயமிக்க கற்சிற்பங்கள், கட்டிடக்கலை ஆகியவை தெய்வீக அனுபவத்தை கொடுத்துள்ளன. நாட்டு மக்களின் நலனுக்காகவும், தேசத்தின் வளர்ச்சிக்காகவும் சுவாமியிடம் பிரார்த்தனை செய்தேன் என்று கையெழுத்திட்டுள்ளார்.

குழந்தைகளை வாழ்த்திய ஜனாதிபதி
இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரை காண மதுரையின் மாட வீதிகளில் ஏராளமானோர் குவிந்திருந்தனர். மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் முடித்த பின் அரசினர் மாளிகைக்கு திரெளபதி முர்மு புறப்பட்டார். அப்போது கீழவெளி வீதிகளில் குழந்தைகள், மாணவர்கள் நின்று கையசைத்தனர். இவர்களை பார்த்த திரெளபதி முர்மு, திடீரென காரில் இருந்து இறங்கி குழந்தைகளுக்கு கை குலுக்கி, வாழ்த்து தெரிவித்தார். குடியரசுத் தலைவரை திடீரென சந்தித்த குழந்தைகள் உற்சாகமடைந்தனர்.












Click it and Unblock the Notifications