தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! அப்பாவி மக்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக போராட்டம்
மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டு வழக்கு தொடர்பாக அப்பாவிகள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக கூறி மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் தொழிலதிபர் அனில் அகர்வாலுக்கு சொந்தமான வேதந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் உருக்கு ஆலை செயல்பட்டு வந்தது.
இந்த ஆலையிலிருந்து வெளியாகும் புகை, கழிவுநீரால் அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி பல நாட்களாக அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்பாக்கிச்சூடு
இந்த போராட்டத்தில் ஏராளமான எதிர்க்கட்சிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர். தேசியளவில் கவனம் ஈர்த்த இந்த போராட்டத்தின் 100 வது நாளான மே 22 2018 அன்று ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2 பெண்கள் 13 பேரை காவல் துறை சுட்டுக்கொன்றது நாட்டையே அதிர வைத்தது.

அருணா ஜெகதீசன் ஆணையம்
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசால் அமைக்கப்பட்டது. கடந்த 2018 ஜூன் 4 ஆம் தேதி தொடங்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் உறவினர்கள், போராட்டக்குழுவினர், தூத்துக்குடி மக்கள், நேரடி சாட்சிகள், மறைமுக சாட்சிகள், போலீசார் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இடைக்கால அறிக்கை
பல்வேறு கால நீட்டிப்புகளை கடந்த சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விசாரணை நிறைவடைந்ததை அடுத்து கடந்த ஆண்டு மே 14 ஆம் தேதி இடைக்கால அறிக்கையை அருணா ஜெகதீசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தார். அதன் பின்னர் கடந்த 18 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அருணா ஜெகதீசன் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ 101 நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் 27 பேர் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜரானதால், மீதமுள்ள 74 பேர் ஆஜராக மதுரை மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில் 64 பேர் இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராகினர். ரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

சிபிஐக்கு எதிராக முழக்கம்
வழக்கில் ஆஜரான அனைவரின் பெயர் விவரங்கள் நீதிபதியால் சரிபார்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வழக்கில் இன்னும் பத்து நபர்கள் ஜூன் 6-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தின் வெளியே வழக்கில் ஆஜராக வந்தவர்கள் மற்றும் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் சிபிஐ க்கு எதிராக கோஷங்களை எழுப்பப்பட்டன.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், "இந்த துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிஐக்கு மாற்ற பட்டது. காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூட்டில் என்ன பங்காற்றினார்கள் என்று விசாரணையில் கண்டறிவதற்குதான். ஆனால் இன்று அப்பாவி பொதுமக்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரங்களில் தமிழக அரசு இந்த நேரடியாக தலையிட வேண்டும் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். குறிப்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications