அரசியல் ஹீரோ Vs சினிமா ஹீரோ.. மாற்றத்தை தருமா மதுரை மத்தி? முட்டி மோதும் பிடிஆர்.. கூலாக சுந்தர் சி!
மதுரை: தமிழகம் முழுவதும் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அனல் பறக்கிறது. தமிழக அரசியலில் பல மாற்றங்களை உருவாக்கிய மதுரையில் இந்த முறை யாருக்கு வெற்றி என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும், அதிமுக கூட்டணியின் சுந்தர் சி-யும் களம் காண்கின்றனர். இருவருக்கும் சரிசமமாக பலம் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் வெற்றி பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கோடை வெயிலின் தாக்கத்தை விட தேர்தல் களத்தின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தமிழக அரசியலில் முக்கிய தலைவர்கள்.

மாவட்ட அரசியலில் கோலொச்சும் சீனியர்களும் ஜூனியர்களும் தங்கள் பங்குக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் மையப் பகுதியும் தமிழக அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்திய மதுரை பரபரத்துக் கிடக்கிறது.
2026 சட்டசபை தேர்தல்
குறிப்பாக மதுரை மத்திய தொகுதியில் வழக்கத்தை விட தேர்தல் ஜுரம் அதிகமாகவே இருக்கிறது. இரண்டு முறை வென்ற பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்குகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதி கட்சி சார்பில் அதுவும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறார் பிரபல இயக்குநரான சுந்தர் சி. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதி கட்சி இணைந்திருக்கும் நிலையில் அந்த கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை மத்திய தொகுதி
அதில் ஒரு தொகுதியில் அதாவது மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டிருக்கிறார். திமுக தலைமையுடன் பிடிஆர் லேசான உரசல் போக்கை கடைபிடித்து வருவது மதுரை திமுக தொண்டர்களை அதிருப்தியில் ஆழ்த்தி இருந்தாலும் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பிடிஆருக்கு ஆதரவாக பேசியது தற்போது அங்கு எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
அதே நேரத்தில் அவரை எதிர்த்து பிரபலமான ஒரு முகம் களம் இறக்கப்பட்டிருப்பதால் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர். 2016 தேர்தலில் எளிதாக வெற்றி பெற முடியாவிட்டாலும் 2021ல் சுலபமாக வெற்றியைப் பெற்றார் பிடிஆர். இந்த நிலையில் தான் தற்போது சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சுந்தர் சி - பிடிஆர்-க்கு கடும் டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தர் சி
வழக்கமாக அரசியல் பேசாத சுந்தர் சி மதுரை மத்திய தொகுதியில் பி டிஆர்-ஐ கேள்வி கேட்டு வருகிறார். பத்தோடு பதினொன்றாக சுந்தர் சி சென்று விடுவார் என எதிர்பார்த்த பிடிஆர்-க்கு மதுரை மத்திய தொகுதியில் அவரது செயல்பாடுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் சினிமா சங்கி என்றெல்லாம் அவரை விமர்சித்ததாக சொல்கின்றனர் அதிமுகவினர். கூடுதலாக சுந்தர்சிக்கு ஆதரவாக அழகிரியின் ஆதரவாளர்களான மன்னன், எஸ் ஆர் கோபி உள்ளிட்டோரும் பணியாற்றி வருவது அங்கு அனல் பறக்க வைத்துள்ளது.
மதுரை அரசியல்
கூடுதலாக நாம் தமிழர், தமிழக வெற்றிக்கழகம் ஆகியோரும் திமுகவின் வாக்குகளை பிரிப்பார்கள் என சொல்லப்படுவதால் பழனிவேல் தியாகராஜனுக்கு சற்று நெருக்கடி இருப்பது உண்மைதான். அதே நேரத்தில் பாரம்பரிய வாக்கு வங்கி, திமுகவின் பலம், பிடிஆரின் தனிப்பட்ட செல்வாக்கு என பிடிஆர் மிக பலமாகவே இருக்கிறார். இப்படி தமிழகம் அறிந்த இரண்டு பிரபலங்கள் நேருக்கு நேர் மோதுவது மதுரை மத்திய தொகுதியை ஸ்டார் தொகுதியாக மாற்றியுள்ளது. அதில் வெற்றி கொடி நாட்டப் போவது யார் என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.














Click it and Unblock the Notifications