இஸ்லாம் மத தூதர்களை தவறாக சித்தரித்து பதிவு.. ராமநாதபுரம் பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு
மதுரை: இஸ்லாம் மத தூதர்களை தவறாக சித்தரித்து ஃபேஸ்புக் தளத்தில் கருத்து பதிவிட்ட குற்றச்சாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான குருஜிக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த அகமத் பயாஸ் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "ராமநாதபுரம் மாவட்டம் நம்புதலையைச் சேர்ந்த குருஜி என்பவர் பாஜக ஆன்மிக பிரிவு மாநில பொறுப்பாளர் ஆக இருந்து வருகிறார். தொண்டி பகுதியில் இந்து, இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் சகோதரர்களாக பழகி வருகிறார். அவர்களுக்கிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக குருஜி பேஸ்புக் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இஸ்லாமிய மத போதகர்கள், தர்கா, ஹஜ்ரத் போன்றவை குறித்து மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அரசியல் காழ்ப்புணர்வுடன் வரலாறுகளை சித்தரித்து, கேவலமான பதிவுகளை பேஸ்புக்கில் பதிவு செய்து வருகிறார். இது இஸ்லாமியர்களை மிகவும் புண்படுத்தியதுடன், காயப்படுத்தியுள்ளது. குருஜி தொடர்ந்து மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவே செயல்பட்டு வருகிறார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இஸ்லாமியர்களுக்கு எதிராக கீழ் தரமற்ற பேஸ்புக் பதிவுகளை வெளியிட்டு வரும் பாஜக நிர்வாகி குருஜி மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி பி.புகழேந்தி முன்பு கடந்த மாத இறுதியில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், "மனுதாரரின் புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார். மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், புகார் அளித்து பல மாதங்கள் கடந்துள்ளது. இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குருஜி அவரது முகநூலில் இந்து - முஸ்லிம் மக்களுக்கிடையே கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக பதிவுகளை பதிவிட்டு வருகிறார்" என்றார்.
இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி, " எவ்வாறு இதுபோன்ற பதிவுகள் பதிவிடப்படுகிறது. மோசமான, பார்க்கவே சகிக்க முடியாத பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய இவ்வளவு தாமதம் ஏன்? இது போன்ற குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இந்த வழக்கு குறித்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதுபோன்று மத மோதல்களை உருவாக்கும் நபர்களை விசாரணை செய்ய வேறு ஏதேனும் பிரிவு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக மோசமான அவதூறு பதிவு.. ராமநாதபுரம் பாஜக நிர்வாகி அதிரடியாக கைது
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி போலீசார் தலைமறைவாக இருந்த குருஜியை காரைக்காலில் வைத்து கைது செய்தனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே குருஜி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், “என் மீது இஸ்லாமிய மத தூதர்களை தவறாக சித்தரித்து, மதக்கலவரத்தை தூண்டும் விதமாக முகநூலில் பதிவுகளை வெளியிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிறையில் இருந்து வருகிறேன். நான் அதுபோன்ற பதிவுகள் எதையும் சமூக வலைதளத்தில் பதிவிடவில்லை. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.
குருஜியின் மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி நக்கீரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மனுதாரர் மத மோதல்களை உருவாக்கும் விதத்தில் சமூக வலைதளத்தில் மிகவும் மோசமான விமர்சனங்களை பதிவிட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருவதால் இவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" என்று வாதிட்டார். இதேபோல் குருஜிக்கு எதிராக வழக்கை போட்ட மனுதாரரான அகமது ஃபயாஸ் என்பவரும், மனுதாரரின் ஃபேஸ்புக் பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டு, அவருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரினார். இதையேற்று விசாரணையை ஜூலை 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications