“'கள்'-ஐ உணவு என சிலர் தவறாக பரப்பி வருகின்றனர்” - புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வேதனை
மதுரை: கள் எங்கள் உணவு! கள் எங்கள் உரிமை! என்று சீமான் கூறியிருந்தார். மட்டுமல்லாது அவரே பனைமரம் ஏறி கள்ளு இறங்கியிருந்தார். இந்நிலையில், 'கள்'-ஐ உணவு என சிலர் தவறாக பரப்பி வருகின்றனர் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வேதனை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "சிலர் கள்ளு-ஐ உணவு என்கிற அடிப்படையில் பேசி வருகிறார்கள். மதுவிலக்கே அமல்படுத்தினாலும், கள்ளு உடம்புக்கு ஒன்றும் செய்யாது, அது பானம், மதுப்பால் என்று தவறாக மக்கள் மத்தியில் ஒரு பிரச்சாரத்தை துவக்கி சட்டத்தையும் மீறி கள் இறங்கியுள்ளார்கள். இது இன்னும் மிகப்பெரிய ஆபத்தாகும்.

கள் என்பது மது என்ற காரணத்தினால்தான், 2,000 வருடங்களுக்கு முன்பு இயற்றப்பட்ட திருக்குறளில் கள் உண்ணாமை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கள் உண்ணக்கூடிய அரசனை கண்டு, பக்கத்துல இருக்க கூடிய அரசர்கள் கூட பயப்பட மாட்டார்கள். கள்ளு உண்ணக்கூடிய மகனை பெற்ற தாய் கூட வெறுத்து ஒதுக்குவாள். காதலியும் வெறுத்து ஒதுக்குவாள். இப்படி எல்லாம், கள் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து இலக்கியங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதேபோல நம்முடைய சிலப்பதிகாரத்தில் இது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. நான்கு விஷயங்களுக்காக இந்த சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது. ஒன்று 'கள்' உண்ணாமை, இரண்டாவது களவுத்தனம் கூடாது, மூன்றாவது பொய் கூறக்கூடாது, நான்காவது கொலை கூடாது. இது சிலப்பதிகாரத்தின் முக்கிய அம்சம்.
அப்போ இலக்கியங்களிலேயே கள்ளு என்று சொன்னால், அது மது, தீங்கு விளைவிக்கக்கூடிய ஒன்று என்று கூறப்பட்டிருக்கிறது. 1,000-2,000 வருடங்களாக இருக்கக்கூடிய ஒரு விஷயத்தை, அரசியல் காரணங்களுக்காக ஒரு சிலர் தவறாக சித்தரிக்கின்றனர். கள் உடம்புக்கு நல்லது என்று, கெடாத கள் என்றெல்லாம் கூறுகிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.
தென்னை மரத்திலிருந்து நேராக வடியும்போது அதை அப்படியே நாலு டிகிரி செல்சியஸில் இறக்கி, அதாவது பனிக்கட்டியாக கூடிய அளவுக்கு நெருக்கமான வெப்பநிலையில் இறக்கி, 10 டிகிரி செல்சியஸில் வைத்திருந்தால் வேண்டுமென்றால் அது கெடாது என சொல்லலாம். அதற்கு நீரா என்று பெயர். அது புரோ பயாடிக்காக இருக்கும்.
ஆனால், காலையில் 10 மணிக்கு பானையை கட்டிட்டு அடுத்த நாள் காலை 10 மணிக்கு வந்து அந்த பானையை இறக்கினால், அது 16% மதுவாக, ஆல்கஹாலாக மாறியிருக்கும். இந்த அறிவியல் உண்மையை மறைத்து குழந்தைக்கும் கள்ளு கொடுக்கலாம் என்று சொல்வதெல்லாம் ஆபத்தானது" என கூறியிருக்கிறார்.
ஜூன் 15ம் தேதி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பெரிய தாழை, குலசேகரப்பட்டினத்தில் 'கள் எங்கள் உணவு! கள் எங்கள் உரிமை!' என்ற முழக்கத்தை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்தியிருந்தார்.
தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கு அனுமதி வேண்டும் என்றும், அது விவசாயிகளின் உரிமை என்றும் அவர் பேசியிருந்தார். இந்த சம்பவம் பெரிய விவகாரமாக வெடித்திருந்தது. இந்நிலையில், கள் குறித்து கிருஷ்ணசாமி வேதனை தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications