’அவரு’ புகழ்ந்து பேசுறாரா? எனக்கென்னமோ ட்வுட்டா தான் இருக்கு! பெரும் போராட்டம்..பளான் போடும் ‘மாஜி’
மதுரை: தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம் இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்துத்வா கொள்கை கொண்டவர் எனவும், தான் ஒரு இந்து என வெளிப்படையாக பேசியதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக இந்துத்வா கொள்கையில் இருந்து விலகி விட்டதாகவும், இதனால் அதிமுகவுக்கு வாக்களித்து வந்த பாஜக பக்கம் திரும்பியுள்ளதால், தமிழக பாஜக தமிழகத்தில் பெரிய கட்சியாக வளர்ந்து வருவதாகவும் அந்த நேர்காணலில் அண்ணாமலை பேசியிருந்தார்.
அண்ணாமலை: அண்ணாமலையின் இந்த பேச்சு அதிமுகவினை கொதிப்படையச் செய்துள்ளது. இதனையடுத்து அண்ணாமலைக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம் இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை கோட்டைமேடு கிராமத்தில் அன்னதானம் நடைபெற்றது.
ஜெயலலிதா: இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " புரட்சித்தலைவி அம்மா இந்துத்துவா கொள்கை கடைப்பிடித்தார் அவர் இல்லாததால் அதை நாங்கள் கடைபிடிக்கிறோம் என்று அண்ணாமலை கூறுகிறார். இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று அம்மாவின் வார்த்தைக்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமி உயிரை கொடுத்து தியாகவேள்வியில் தன்னை அர்ப்பணித்து பணியாற்றி வருகிறார் .
எடப்பாடி பழனிசாமி: நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் இந்த வெற்றியே நடைபெறும். சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சர் ஆவதற்கு அச்சாரமாக அமையும். சிலருக்கு புகழ்வதும், இகழ்வதும் கைவந்த கலை. உயிரை தியாகம் செய்து இரண்டு கோடி தொண்டர்கள் கழகத்திற்காக பணியாற்றிக் கொள்கிறார்கள். அவரின் பேச்சு அதிமுகவிற்கு தேவைபடாது.
ஏற்க மாட்டார்கள்: அண்ணாமலை அதிமுக உறுப்பினராக சேர்ந்து கொண்டு அம்மாவை பற்றி பேசினால் ஏற்றுக் கொள்வோம். அண்ணாமலை வாஜ்பாய், அத்வானி, வீரசாகர் ஆகியோரின் சாதனையை சொல்லி பாராட்டி ஏன் கெளரவிக்கவில்லை. மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த அம்மாவை அண்ணாமலை புகழ்வது அரசியல் உள்நோக்கம் உள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் அவர் பேசியதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.
முல்லைப்பெரியாறு: மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளின் குடிநீர் பிரச்சனைக்கும், விவசாயத்திற்கும் தேவையானது முல்லைப் பெரியாறு ஆகும். இங்கு கடந்த மூன்று ஆண்டுகளாக கேரளா அரசு அணைக்கட்ட முயற்சிக்கிறது. திமுக அரசு முல்லைப் பெரியாறு உரிமைக்காக எதையும் செய்யவில்லை. திமுக அரசு தொடர்ந்து மெத்தன போக்கை காட்டி வருகிறது.
மிகப்பெரும் போராட்டம்: இங்கு உயிர்பறி போகிறது ஆனால் உரிமையை நிலைநாட்ட எந்த முயற்சியும் எடுக்கவில்லை எதற்காக இதை செய்கிறார் முதலமைச்சர்? வாக்கு வங்கிக்காகவா? கூட்டணி தர்மத்திற்காகவா ?தன் குடும்ப சொத்தை பாதுகாக்கவா? ஜனவரி மாதத்தில் நடைபெற்ற இந்த திரை மறைவு வேலையை தேர்தலுக்காக திமுக அரசு மறைப்பதின் அவசியம் என்ன? முல்லை பெரியார் உரிமை பிரச்சனையில் அரசு தொடர்ந்து மென்மை போக்கை திமுக அரசு கடைபிடித்தால் எடப்பாடியாரை அழைத்து வந்து மதுரை அல்லது தேனியில் விவசாயிகள் உரிமையை காக்க மாபெரும் போராட்டம் நடத்த நாங்கள் ஒரு நாளும் அஞ்ச மாட்டோம் எந்த சூழ்நிலையும் நாங்கள் முல்லை பெரியாரைக் காக்க போராடுவோம்." என கூறினார்.












Click it and Unblock the Notifications