செங்கல் காட்டி ஓட்டு கேட்டீங்களே.. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக என்ன செய்தீங்க- ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்
மதுரை: செங்கலை காட்டி மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த திமுக தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ வும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை மனுவை வழங்கினார்.
டி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை போக்க டேராபாறையில் அணை கட்ட வேண்டும், திருமங்கலம் நகர்ப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் விரைந்து அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை அவர் அளித்தார்

எய்ம்ஸ் மருத்துவமனை
"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளின் படி திருமங்கலம் தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்." என்றும் அவர் மனுவில் கோரி இருந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்பி உதயகுமார், "செங்கலை காட்டி மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த திமுக எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை.

முதியோர் உதவித்தொகை
எய்ம்ஸ் பணிகள் கிடப்பில் போட்ட கல்லாக உள்ளது. கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். அதிமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை திட்டத்தில் 37 லட்சம் முதியோருக்கு ரூ.4300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முறையாக வழங்கப்பட்டது. முதியோர் உதவி தொகையை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக தேர்தல் நேரத்தில் அறிவித்த திமுக தற்பொழுது முதியோர் உதவித்தொகையை ரத்து செய்து வருவது வேதனை அளிக்கிறது.

மதுரைக்கான திட்டங்கள்
மதுரை வளர்ச்சிக்காக திமுக அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. முதல்வர் மதுரை மக்களை உண்மையாக நேசிப்பவராக இருந்தால் வரும் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் மதுரைக்கு செயல்படுத்திய திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும். முதல்வர் விழா நாயகனாக உள்ளார். ஆனால் விழாவில் பங்கேற்கும் பயணிகளுக்கு எந்த பயனும் இல்லை.

மதுரை வந்த ஸ்டாலின்
மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் நூலகத்திற்கு பல முறை வருகை புரிந்த முதல்வர் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை ஒரு முறை கூட பார்வையிடவில்லை. தமிழகத்தில் வலம் வரும் முதல்வரால் சாமானிய மக்களின் வாழ்வை வளமாக்க இயலவில்லை என்பது நிதர்சனம்.

ஏளனம்
முதலமைச்சர் ஏளனம் செய்வது எடப்பாடி பழனிச்சாமியை அல்ல. அதிமுகவிற்கு வாக்களித்த மக்களை ஏளனம் செய்வது போல் உள்ளது. முதல்வர் எதிர்கட்சியையும் எதிர் கட்சி தலைவரையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்கட்சியை மதிக்காதவர் எப்படி மக்களை மதிப்பார்." என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications