அதிமுக தொண்டர்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து! குடும்பத்துடன் பரோட்டா சுட்ட மாஜி மந்திரி உதயகுமார்!
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அதிமுக தொண்டர்களுக்காக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது குடும்பத்தினருடன் பரோட்டா சுட்ட நிகழ்வு நடந்துள்ளது.
இதேபோல் மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கட்சிக்காரர்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் ஆர்.பி.உதயகுமார்.
மதியம் மட்டன் பிரியாணி, இரவு பரோட்டா சால்னா என ஆர்.பி.உதயகுமார் வைத்த விருந்தை ஒரு பிடி பிடித்த அதிமுக தொண்டர்கள் பலரும், இன்று மதுரையிலிருந்து தேனி புறப்பட்டுச் சென்று அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

மின் கட்டணம்
தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கட்சிக்காரர்கள் அனைவருக்கும் டி.குன்னத்தூரில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் மட்டன் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தினார்.

பரோட்டா சால்னா
ஆர்ப்பாட்டத்தை முடித்த கையோடு நேராக பிரியாணி சமைத்துக் கொண்டிருந்த இடத்துக்கு சென்ற அவர், தாமே பிரியாணிக்கு போடப்பட்டிருந்த தம்மை உடைத்து கறி வெந்துள்ளதா என பார்த்தார். பிறகு அப்படியே நேற்றிரவும் பரோட்டா சால்னா என தயாரித்து கட்சிக்காரர்களுக்கு விருந்து கொடுத்தார் ஆர்.பி.உதயகுமார். பிறகு அப்படியே அவர்கள் அனைவரையும் மதுரையிலிருந்து தேனியில் தனது தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைப்பதற்காக பேக் அப் செய்தார்.

மதுரை டூ தேனி
மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோரை மதுரையிலிருந்து பேருந்துகள் மற்றும் வேன், கார்கள் மூலம் தேனி அழைத்துச்சென்ற ஆர்.பி.உதயகுமார் அங்கும் தனது பிரம்மாண்டத்தை காட்டினார். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் மற்ற மாவட்டங்களை விட கூட்டம் அதிகம் இருக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் உத்தரவே தொண்டர்களை ஆர்.பி.உதயகுமார் இப்படி விழுந்து விழுந்து கவனிப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.
Recommended Video

தேனியிலும் தடபுடல்
நேற்று மதுரை திருமங்கலத்தில் வைக்கப்பட்ட விருந்தை போலவே இன்று தேனி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் பிரியாணி விருந்து கொடுக்கிறார் ஆர்.பி.உதயகுமார். திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தும் பலர் தேனி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications