குளறுபடிகள் ஏதுமில்லை... தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவு அவசியமற்றது... தங்க தமிழ்ச்செல்வன் காட்டம்
மதுரை: தேனி தொகுதியில் குளறுபடிகள் ஏதுமின்றி தேர்தல் நடந்த நிலையில் 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது தேவையற்றது என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், தெரிவித்துள்ளார்.
தவறு நடந்த 46 இடங்களில் 3லும், ஏற்கனவே பரிந்துரைத்த 10 இடங்களையும் சேர்த்து 13 இடங்களிலும் மே.19ல் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாக விளக்கமளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மே 6-ல் ஆணையத்துக்கு அனுப்பிய அறிக்கை அடிப்படையில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.
அந்தவகையில், தேனி நாடாளுமன்ற தொகுதி, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் கம்மவர் சரஸ்வதி நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 67-ல் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அதே போல், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபட்டி சங்கரநாராயணா நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 197-ல் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

வாக்காளர்களுக்கு பணம்
இந்தநிலையில், மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இரைத்து வருவதாகவும், அதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

உண்மையில்லை
திமுகவில் தான் இணையப்போவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை எனக் கூறிய அவர், என்றுமே திமுக தங்களுக்கு எதிரி என்றும், எடப்பாடி பழனிச்சாமி தங்கள் துரோகி எனவும் கூறினார்.

அவசியமற்றது
மேலும், தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவு அவசியமற்றது எனக் கூறிய அவர், இதற்காக லட்சக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

பலவீனமாகவே இருக்கும்
முன்னதாக, வாக்கு எண்ணிக்கையான வருகிற 23-ந்தேதிக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு புறப்பட வேண்டியது தான். மத்தியில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும் அ.தி.மு.க.வுக்கு பலவீனமாகவே இருக்கும் என்றும் அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications