பஸ்ஸில் கிடைத்த ரூ.12 லட்சம் வைரம்! ஓய்வு பெற்ற எஸ்ஐக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அப்புறம் தான் ட்விஸ்டே!
மதுரை: மதுரையிலிருந்து திருச்சிக்கு சோதனை செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள் திருடப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற எஸ்ஐ உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். திருடிய நகைகளை விற்பனை செய்வதாக வாட்ஸ் அப்பில் விளம்பரம் செய்ததால் தற்போது காவல்துறையின் பிடியில் சிக்கி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அந்த ஓய்வு பெற்ற எஸ்ஐ.
கர்மா இஸ் பூமரங் என சொல்வார்கள். அதாவது ஒரு தவறு செய்தால் மீண்டும் அதே தவறில் நாமும் சிக்கிக் கொள்வோம் என்பதுதான். அப்படி நகை வியாபாரியிடம் வைரக் கற்களை திருடிய ஓய்வு பெற்ற எஸ்ஐ உள்ளிட்ட மூன்று பேர் அதே வைர வியாபாரியிடம் சிக்கி இருக்கிறார்கள்.
மதுரை நகைக்கடை பஜாரில் கடை நடத்தி வருபவர் தொட்டியம் கிணற்று சந்தையை சேர்ந்த செல்வராஜ். 69 வயதான இவர் வைர வியாபாரமும் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தான் வாங்கிய வைரக் கற்கள் உண்மையானதா என்பதை சோதனை செய்வதற்காக திருச்சி ஜான் பாஷா தெருவில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்றிருக்கிறார்.

வைரக் கற்கள் திருட்டு
அங்கு ஒரு கடையில் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்களை சோதனை செய்திருக்கிறார். பின்பு அதனை ஒரு சிறிய பையில் வைத்து தனது சட்டை பாக்கெட்டில் வைத்துவிட்டு மதுரை திரும்ப திட்டமிட்டார் செல்வராஜ். திருச்சி தேவர் மண்டபம் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தில் ஏறி திருச்சி மத்திய பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது கூட்ட நெரிசலாக இருந்த நிலையில் அவரது சட்டைப் பையில் இருந்த வைரக் கற்கள் காணாமல் போயின. கூட்டத்தில் யாரோ ஒரு மர்ம நபர் அதனை திருடி இருக்கலாம் என சந்தேகித்த செல்வராஜ் இது குறித்து திருச்சி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வைரம் கொள்ளை
புகார் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்து நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியும் கொள்ளையர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் மதுரையை சுற்றியுள்ள நகை வியாபாரிகளுக்கு நேற்று வாட்ஸ் அப்பில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள் விற்பனைக்கு இருப்பதாக ஒரு புகைப்படமும் பரிமாறப்பட்டது. அதில் இருந்த பை மற்றும் வைரக்கற்கள் தன்னுடையது போல் இருந்ததால் சந்தேகம் அடைந்த செல்வராஜ் இது குறித்து மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வாட்ஸ்அப் விளம்பரம்
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நகை வியாபாரி போலவே அந்த வாட்ஸ் அப் புகைப்படத்தை அனுப்பிய நபரை தொடர்பு கொண்டு பேசினர். விசாரணையில் அந்த வாட்ஸாப் புகைப்படத்தை அனுப்பியது மதுரை முத்தங்குடி பகுதியைச் சேர்ந்த பாண்டியன், மேலூர் முகமது சையது இப்ராஹிம், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் பாண்டியன் மதுரை போலீசில் எஸ்ஐ யாக பணியாற்றி ஓய்வு பெற்றதும் தெரிய வந்தது. இதை அடுத்து வைரக்கற்களை வாங்குவது போல அவர்களை வரவழைத்து கைது செய்த போலீசார் அவர்களை தனி இடத்தில் வைத்து விசாரித்தனர்.
திருச்சி போலீஸ்
அப்போது திருச்சியை சேர்ந்த ஒருவர்தான் தங்களிடம் இந்த வைர கற்களை கொடுத்து விற்பனை செய்து தருமாறு கூறியதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் செல்வராஜை பின் தொடர்ந்து சென்ற பிக்பாக்கெட் கும்பல் அவரிடம் இருந்து வைர கற்களை கொள்ளையடித்து அதற்குப் பிறகு மதுரை கும்பலிடம் விற்பனைக்கு கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. கொள்ளை நடந்த இடம் திருச்சி என்பதால் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற எஸ்ஐ உள்ளிட்ட மூவர் திருச்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து வைரக்கற்களை விற்பனைக்கு கொடுத்த கும்பல் குறித்து தனியே விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications