30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக்கொண்ட.. முன்னாள் பள்ளி மாணவர்கள்.. மதுரையில் நெகிழ வைக்கும் சம்பவம்
மதுரை: மதுரையில் உள்ள பிரபல தனபால் மேல்நிலை பள்ளியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் 30 வருடம் கழித்து சந்தித்துக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒருவரின் வாழ்க்கையில் பள்ளி பருவம் என்பது மறக்க முடியாத ஒன்று. அதிலும் பள்ளி காலத்தில் இருந்த கள்ளங்கபடமற்ற நட்பு வேறு எங்கும் கிடைக்காது. பள்ளி காலத்தில் நம்முடன் நெருக்கமாக பழகிய நண்பர்களை மீண்டும் சந்திப்பது என்பதே ஒரு வரம்தான். 96 படத்தில் வருவது போல முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பதே அலாதியானது.

அந்த வகையில் மதுரையில் இருக்கும் பள்ளி ஒன்றில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடத்தி உள்ளனர். மதுரையில் பீபீகுளம் மற்றும் முல்லைநகர் பகுதியில் இருக்கும் பிரபல தனபால் மேல்நிலை பள்ளி மாணவர்கள் இந்த சந்திப்பு கூட்டத்தை நடத்தி உள்ளனர். இங்கு கடந்த 1991-92 ம் ஆண்டில் பயின்ற பள்ளி மாணவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்த ஒருங்கிணைவு விழாவை நடத்தி உள்ளனர்.
நேற்று மதுரை குலமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள பிஎன்ஆர் மகாலில் இவர்கள் சுமார் 30 வருடங்களுக்கு பின் சந்தித்துக்கொண்ட இனிமையான விழா நடைபெற்றது. ஒரே அறையில் பயின்று, மைதானத்தில் ஒன்றாக விளையாடிய முன்னாள் மாணவர்கள் நேற்று நடந்த இந்த விழாவில் கலந்து கொண்டு நினைவுகளை அசைபோட்டனர்.
முன்னாள் மாணவர்கள் சுமார் 50 பேர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். பல வருடங்களுக்கு பின் நடந்த இந்த விழா மிகவும் உருக்கமாக அமைந்தது.
இந்த விழாவை பாண்டியராஜன், சரவணன், தேவசேனாதிபதி , ராதாகிருஷ்ணன், அருணகிரி, ஜெயக்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்ட நிகழ்வு மிகவும் உருக்கமாக அமைந்தது.












Click it and Unblock the Notifications