1000 பெரியார் வந்தாலும்..இன்னும் திருந்தாத ஊருங்க! சாதி வன்கொடுமையில் NO.1 மதுரை! நெல்லை வேற இருக்கே
மதுரை : தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் மதுரை தொடர்ந்து முதலிடம் வகித்து வருவதாக வெளியான ஆர்டிஐ தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நெல்லை இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், இதுபோன்ற வன்கொடுமைகள் நடைபெறும் தமிழகத்தின் 394 கிராமங்களில் தென் மாவட்டங்களில் மட்டும் 171 கிராமங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது..
தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகமாக நடக்கும் மாவட்டங்களில் டாப்-10 பட்டியலில் 45 எண்ணிக்கையுடன் மதுரை தொடர்ந்து முதல் இடம் பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் 394 கிராமங்களில், தென் மாவட்டங்களில் மட்டும் 171 கிராமங்கள் இடம் பிடித்துள்ளன என காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஆர்டிஐ தகவலால் அதிர்ச்சி மக்கள் கருத்து கேட்பு நடத்தப்படவேண்டும் என மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கேட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது.
கடந்த 2024 மார்ச் மாதம் இறுதி நிலவரப்படி தமிழக காவல்துறையின் ADGP சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அறிக்கையின்படி தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகம் கடைபிடிக்கப்படும் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை 394, இதில் அதிகபட்சமாக முதல் இடத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் 45ம், 2ஆவது திருநெல்வேலியில் 29ம், 3ஆவது திருச்சியில் 24ம், 4ஆவது தஞ்சாவூரில் 22ம், 5ஆவது இடத்தில் தேனியில் 20ம் என்கிற வரிசையில் இடங்களை பிடித்துள்ளன.
பட்டியலின் கடைசியாக 38ஆவது இடத்தில் கள்ளகுறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஒரே ஒரு கிராமம் மட்டும் கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பட்டியல் வரிசையில் சாதிய வன்கொடுமைகள் பதற்றம் நிறைந்த கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் மறுபுறம் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
2021இல் 597 கூட்டங்களும், 2022இல் 988 கூட்டங்களும், 2023இல் 3,221 கூட்டங்களும், 2024 மார்ச் வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் 1,861 கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 13ஆவது இடத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெறும் 11 நகர் மற்றும் கிராம பகுதிகளுக்கான விழிப்புணர்வு கூட்டங்கள் மொத்தம் 534 எண்ணிக்கையில் நடத்தப்பட்டுள்ளன.
ஆனால் இதே காலகட்டத்தில் தமிழகத்தில் முதல் இடத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் 335 கூட்டங்களே நடத்தப்பட்டுள்ளன. கடைசி இடத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே ஒரு கிராமம் மட்டும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த ஒரு கிராமத்திற்கு மட்டும் 136 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது. மதுரை, திருநெல்வேலி உட்பட தென் மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பிடும்போது கடந்த 2023ஆம் ஆண்டு விழிப்புணர்வு கூட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், சாதிய வன்கொடுமைகள் நடைபெறும் கிராமங்களில் மக்களிடையே சாதிய பாகுபாடுகளற்ற நல்லிணக்க கிராமங்களாக மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியமுடிகிறது.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கார்த்திக்," ஆகையால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ADGP சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு மற்றும் சமூக நலத்துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் பதற்றம் நிறைந்த கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவதோடு ஆக்கப்பூர்வமாக சமூக நல்லிணக்க கிராமங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதிய வன்கொடுமைகள் பதற்றம் நிறைந்த கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள 304 கிராமங்களை ரோல் மாடல் நல்லிணக்க கிராமங்களாக உருவாக்க நடவடிக்கை எடுப்பதோடு, அவ்வாறான மாடல் கிராமங்களை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கி
ஊக்கப்படுத்த வேண்டும்" என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications