எடப்பாடியார் உருவம் பதித்த டீ சர்ட், டிராக் பேன்ட் .. ரவுண்ட் கட்டி ஒயிலாட்டம் ஆடிய எஸ்.பி.வேலுமணி
மதுரை: மதுரை அதிமுக மாநாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் ஆடி தொண்டர்களை மகிழ்வித்தார்.
மதுரையில் வலையங்குளத்தில் உள்ள மண்டேலா நகரில் அதிமுக மாநாடு நடைபெற்று வருகிறது. இதற்காக பிரம்மாண்ட மேடைகள் அமைக்கப்பட்டன. முகப்பில் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் உருவங்கள் பதிக்கப்பட்டிருந்தன.

பெரிய இரட்டை இலை விழாவில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் காலையில் கட்சிக் கொடியை ஏற்றிய எடப்பாடி பழனிசாமி ஹோட்டல் அறைக்கு ஓய்வெடுக்க சென்றுவிட்டார்.
இதைத் தொடர்ந்து தொண்டர்களை மகிழ்விக்க நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமியின் இசை கச்சேரி நடந்தது. அது போல் தேனிசை தென்றல் தேவாவின் பாட்டுக் கச்சேரியும் நடந்தது. இதை முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆரவாரம் செய்து ரசித்தனர். அது போல் இந்த மாநாட்டில் மதுரை முத்துவின் ஸ்டாண்ட் அப் காமெடியும் இடம்பெற்றிருந்தது.

மேலும் இந்த மாநாட்டில் தலைசிறந்த தலைவராக தலைவராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்திட காரணம், கண் துஞ்சா கழகப் பணியா? மனம் துஞ்சா மக்கள் பணியா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் வைகைசெல்வன் நடுவராக இருந்தார். மாஜி அமைச்சர்கள் வளர்மதி, சி விஜயபாஸ்கர், நடிகை விந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வளர்மதி பேசுகையில் எடப்பாடி பழனிசாமி சேலத்து இரும்பல்ல, சிலுவம்பாளையத்து செங்கரும்பு என அடுக்குமொழியில் பேசியிருந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி சிற்றருவி அல்ல பேரருவி. அதியமான் ஔவைக்கு கொடுத்தது நெல்லிக்கனி, அம்மா கொடுத்ததோ தங்கக் கனி எடப்பாடியார் என பேசினார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் ஆடி அசத்தினார். எடப்பாடி பழனிசாமியின் புகழை விளக்கும் வகையில் பாடப்பட்ட பாடலுக்கு வேலுமணி உள்ளிட்டோர் நடனமாடினர்.

வெள்ளை டீசர்ட் அணிந்து கொண்டிருந்தார். அதில் வலது பக்கம் எம்ஜிஆர், இடது பக்கம் ஜெயலலிதா, நடுவில் எடப்பாடியார் உருவம் பதிக்கப்பட்டிருந்தது. கையில் அதிமுக கொடியை வைத்துக் கொண்டு இவர் ஆடிய நடனத்தை தொண்டர்கள் விசில் அடித்து ரசித்தார்கள். அது போல் இந்த மாநாட்டில் இலவச மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications