'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா'.. அலங்காநல்லூரில் ஒலித்த குரல்.. வீரரை தள்ளிவிட்டு துள்ளி ஒரே ஓட்டம்!
மதுரை : அலங்காநல்லூரில் இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் காளை என அறிவிக்கப்பட்டு களமிறக்கப்பட்ட காளை, திமிலில் கை போட்ட மாடுபிடி வீரரைச் சாய்த்துத் தள்ளி, துள்ளி ஓடி வெற்றி பெற்றது.
சசிகலாவின் நிதி பராமரிப்பில் மதுரை மேலூரைச் சேர்ந்த பெண்மணி வளர்த்து வரும் காளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கியது.
சசிகலாவின் மாட்டைப் பிடித்தால் சைக்கிள் பரிசு என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு வீரர் மாட்டைப் பிடிக்க முயற்சித்த நிலையில் அவரையும் தள்ளிவிட்டு துள்ளி ஓடியது காளை.
சீறிப்பாயும் 800 காளைகள்.. துணிவாக 400 காளையர்கள்.. கரூர் ஆர்டிமலையில் இன்று ஜல்லிக்கட்டு! ஆர்வம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மாடு பிடி வீரர்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகளும், 300 வீரர்களும் களம் காண்கின்றனர். முன்னதாக வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, உடற்தகுதியுள்ள காளைகளும், வீரர்களும் போட்டியில் களமிறக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பரிசு வழங்கிய உதயநிதி
காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கக் காசுகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கினார். அதேபோல், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக ஒரு காரும், சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஒரு காரும் பரிசாக வழங்கப்படவுள்ளன.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா
இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டில் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா அவர்களின் காளை என அறிவிக்கப்பட்டு ஒரு காளை களமிறக்கப்பட்டது. அந்தக் காளையைப் பிடித்தால் சைக்கிள் பரிசு என்றும் அறிவிக்கப்பட்டது. மதுரையில் மேலூர் சின்னக்கரம்பட்டியைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண்மணியின் காளை சசிகலாவின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டது. இந்த காளையை பராமரிக்க 2 லட்சம் ரூபாய் செலவில் சசிகலா கொட்டகை அமைத்து கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
வெற்றி பெற்ற காளை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய சசிகலாவின் இந்தக் காளை மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றி பெற்றது. வாடி வாசலில் இருந்து காளை வெளியே வந்ததும் ஒரு மாடுபிடி வீரர் திமிலைப் பிடிக்க முயன்றார். மின்னல் வேகத்தில் அவரைத் தள்ளிக் கீழே சாய்த்துவிட்டு வெற்றிக் கோட்டைக் கடந்தது சசிகலாவின் காளை.
பொதுச் செயலாளரா?
இதே காளை நேற்று பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டிலும் களமிறங்கி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. சசிகலா பராமரிப்பில் வளர்க்கப்பட்ட காளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்றதை விடவும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சின்னம்மா என அறிவிக்கப்பட்டு காளை அவிழ்க்கப்பட்டது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.