சாத்தான்குளம்: மாஜிஸ்திரேட்டை அவமதித்ததாக ஏஎஸ்பி, டிஎஸ்பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
மதுரை: சாத்தான்குளம் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக தூத்துக்குடி ஏஎஸ்பி குமார் மற்றும் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் மாற்றப்பட்டனர்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19-ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாக்டவுன் நேரத்தை விட கூடுதலாக கடைத் திறந்து வைத்திருந்ததுதான் அவர்கள் மீது சொல்லப்படும் புகாராக இருக்கிறது. இந்த சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை
வழக்கை கோவில்பட்டி மாவட்ட குற்றவியல் நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை நடத்தினார்கள். அப்போது மாஜிஸ்திரேட்டை ஒருமையில் பேசியதாக குமார் மற்றும் பிரதாபன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதற்கான புகாரை கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் கொடுத்தார்.

புகார்
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு போலீஸார் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மாஜிஸ்திரேட் விசாரணைக்கு தடை போடும் வகையில் விசாரணையை தடுத்தனர். விசாரணை செய்ய சென்ற இடத்தில் மாஜிஸ்திரேட்டை ஒருமையில் பேசினார்கள் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சஸ்பெண்ட்
நேற்று தூத்துக்குடி ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகிய இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து இருவரும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டை அவமரியாதையாக பேசிய புகாரில் காவலர் மகாராஜன் நேற்றே சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நீதிமன்றம் தலையிடாது
அதுபோல் ஏஎஸ்பி குமாரும், டிஎஸ்பி பிரதாபனும் நீதிமன்றத்தில் ஆஜராகவும் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக சாத்தான்குளம் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது என கொள்கை முடிவு எடுத்த பின் நீதிமன்றத்தில் தெரிவிப்பது ஏன்? சிபிஐ விசாரணைக்கு மாற்றும் அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications