மூன்றே மாதம்தான்.. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில்.. மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு
மதுரை: நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். செல்போன் கடை நடத்தி வந்த இவர்கள் இருவரையும் கொரோனா ஊரடங்கின் போது அதாவது, கடந்த 2020 ஜுன் மாதம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். அப்போது காவல் நிலையத்தில் போலீசார் அடித்ததில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்தனர்.

சட்டவிரோத காவலில் தாக்கப்பட்ட தந்தை, மகன் இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் என 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் எஸ்எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்டோர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாமீன் கோரி மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியானது. 9 போலீஸ்காரர்களும் ஜாமீன் கிடைக்காததால் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையிலேயே அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த இரட்டைக்கொலை வழக்கு விசாரணை மதுரை முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கும்படி ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்து முடிக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு இறுதியாக 4 மாதம் அவகாசம் அளித்து கடந்த டிசம்பர் மாதம் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும் அந்த வழக்கு விசாரணை இதுவரை முடிவடையவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஜெயராஜின் மனைவி செல்வராணி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில், தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, தந்தை, மகன் கொலை வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என வழங்கி அவகாசம் ஏற்கனவே முடிந்துவிட்டது. ஆனாலும் விசாரணை நிறைவடையவில்லை. அந்த வழக்கை முடிக்க காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.
பின்னர் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த கொலை வழக்கில் இன்னும் ஒரேயொரு சாட்சியிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, விரைவில் விசாரணை முடிந்துவிடும் என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிமன்றம், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை அடுத்த 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications