சாத்தான்குளம் இருவர் கொலை - நீதிபதி முன் தலைமைக்காவலர் ரேவதி பரபரப்பு சாட்சியம்
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விவகாரத்தில் முக்கிய சாட்சியான தலைமைக்காவலர் ரேவதி இன்று தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார்.
மதுரை: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விவகாரத்தில் முக்கிய சாட்சியான தலைமைக்காவலர் ரேவதி இன்று தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் பரபரப்பு சாட்சியம் அளித்திருக்கிறார்.
சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் மரணமும் காவல்நிலையத்தோடு முடிந்து போயிருக்க வேண்டியது. அங்கே நடந்த சம்பவங்களை மாஜிஸ்திரேட்டிடம் வெட்ட வெளிச்சமாக்கியவர் தலைமைக்காவலர் ரேவதிதான்.
இந்த வழக்கை பொறுத்தவரை அதிமுக்கியமான சாட்சி தலைமைக்காவலர் ரேவதிதான். மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு அவர் அளித்த சாட்சியம்தான் படுகொலைக்குக் காரணமானவர்களை இந்த உலகிற்கு தெரிய வைத்தது. அவரின் துணிச்சலுக்கு சமூக வலைத்தளங்களில் சல்யூட் வைத்து வருகின்றனர்.

2 வியாபாரிகள் மரணம்
சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இதை கொலைவழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் 3 பேர் என 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். முதலில் இரவு நேரத்தில் எஸ்ஐ ரகுகணேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்தடுத்த கைது படலம்
இதனைத் தொடர்ந்து மறுநாள் காலையில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, தூத்துக்குடி முதன்மைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட மூன்று பேரையும் ஜூலை 16ஆம் தேதி வரை தூத்துக்குடி பேரூரணி சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.

முக்கிய சாட்சி ரேவதி
வியாபாரிகள் இருவர் மரண வழக்கில் முக்கிய சாட்சியான தலைமைக்காவலர் ரேவதி இன்று தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் பரபரப்பு சாட்சியம் அளித்திருக்கிறார். அவர் ஏற்கனவே மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு அளித்த சாட்சியம்தான் இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

நீதி கிடைக்க வேண்டும்
தந்தை, மகன் மரண வழக்கில் நீதியின் மேல் நம்பிக்கை வைத்திருப்பதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர். இந்த வழக்கில் துணிந்து உண்மையை கூறியிருக்கிறார் ரேவதி. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது போல இந்த வழக்கில் துரிதமாக விசாரணை நடைபெற்று குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.












Click it and Unblock the Notifications