ராஜிவ் கொலை வழக்கு.. 7 தமிழர் உயிரோடு இருப்பது ஜெயலலிதா போட்ட பிச்சை.. செல்லூர் ராஜு ஷாக் பேட்டி
மதுரை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் உயிரோடு இருப்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்ட பிச்சை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மதுரை டி.வி.எஸ். நகரில் நகராட்சி பூங்காவை இன்று திறந்து வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு. பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
திமுகவைப் போன்று வேஷம் போடுவது அதிமுக வழக்கம் இல்லை. தமிழன் என்ற உணர்வோடு, உண்மையாக தமிழர்களுக்காக பாடுபடுவது அதிமுக அரசுதான்.
ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியது அதிமுக அரசு. பேரறிவாளன் உட்பட 7 பேரும் வாழ்ந்துகொண்டிருப்பது ஜெயலலிதா போட்ட பிச்சை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செல்லூர் ராஜுவின் இந்த பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் கவுதமன் கூறுகையில், செல்லூர் ராஜு பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. மிக மோசமானது என்றார்.
தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு கூறுகையில், 7 தமிழர்கள் விடுதலை என்பது அவர்கள் உரிமை. இதனை பிச்சை கிடையாது. உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி அவர்கள் விடுதலைக்கான உத்தரவை பெற்றுள்ளனர். தமிழக அமைச்சரவை இவர்களை விடுதலை செய்ய முடிவெடுத்தும் ஆளுநர் காலதாமதம் செய்து வருகிறார். இதுகுறித்து தமிழக அரசு எதற்காக இன்னும் ஆளுநரை வலியுறுத்தாமல் உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானத்தை செப்டம்பர் 9ஆம் தேதியன்று நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.