“தவெக கொடியை தூக்கும் அளவுக்கு அதிமுககாரன் இழிபிறவி கிடையாது”.. கோபப்பட்ட செல்லூர் ராஜு
மதுரை: "அதிமுக தொண்டர்கள் எங்க கட்சி கொடியவே பிடிக்க மாட்டாங்க.. இதுல அடுத்த கட்சி கொடிய பிடிச்சு ஆட்டுவாங்களா? அதிமுக தொண்டர்கள் மாற்று கட்சி கொடியை பிடித்ததாக வரலாறே கிடையாது" என எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் தவெக கொடி பிடிக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை கூட்டத்தின்போது தவெக கொடி பிடித்தவர் அதிமுக தொண்டர் என விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார்.

2026 சட்டசபை தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசியபோது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, "பாருங்க.. கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாங்க.. ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்க செவியைத் துளைக்கும்" எனப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.
இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், "தன் கட்சியின் தொண்டர்களை வைத்தே விஜய்யின் தவெக கொடியை தன் கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தூக்கிப் பிடிக்க செய்துள்ளார். இதில் இருந்தே தெரிகிறது, விஜய்யின் தலைமையிலான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார் என்று.. அந்த அளவுக்கு அதிமுக பலவீனமாகிவிட்டது" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மதுரை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட விளாங்குடியில், அங்கன்வாடி மையம் மற்றும் நியாய விலை கடை திறப்பு விழா, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எடப்பாடி பிரச்சாரத்தில் தவெக உறுப்பினர்கள் தான் கொடியை காட்டினார்கள். உண்மையிலேயே விஜய்யின் தொண்டர்கள் தான் எடப்பாடி பிரச்சாரத்தில் கொடி காட்டினார்கள்.
விஜய்க்காக குரல் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. அதற்காகவே தவெக தொண்டர்கள் கொடியை காட்டுகின்றனர். தவெக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புகிறார்கள். தவெக தொண்டர்கள் தங்கள் உறுப்பினர் அட்டையைக் காட்டியுள்ளனர். அவர்கள் தான் கொடியைக் காட்டினர். தவெக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புகின்றனர்.
அடுத்த கட்சி கொடியை காட்டும் அளவுக்கு நாங்கள் தரம் தாழ்ந்து போக மாட்டோம். நாங்கள் அடுத்த கட்சியை மதிப்போம். ஆனால், அந்த கட்சியின் கொடியை பிடிக்க மாட்டோம். அதிமுக காரன் அடுத்த கட்சி கொடியை தூக்கியதாக வரலாறு உண்டா? தவெக கொடியை தூக்கிக் காட்டும் அளவுக்கு அதிமுககாரன் இழிபிறவி கிடையாது.
தனக்கு ஒரு பழம் கிடைக்கவில்லை என்றால் அந்த பழம் புளிக்கும் என சொல்வார்கள். அதுபோல தான் விஜய்யின் ஆதரவு கிடைக்காததால், டிடிவி தினகரன், அதிமுக குறித்து விமர்சிக்கிறார். சினிமாவிலும், அரசியலிலும் கொடி நாட்டிய ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் மட்டும் தான். அவரை தவிர வேறு யாராலும் முடியாது. எம்.ஜி.ஆர் உடன் எவரையும் ஒப்பிட முடியாது. விஜய் எம்ஜிஆர் மாதிரி தான். எம்ஜிஆர் அல்ல" என்று தெரிவித்துள்ளார் செல்லூர் ராஜு.












Click it and Unblock the Notifications