ஒரு நிமிஷம்.. அண்ணனுக்கு ஒரு ஓ போடலாமா?.. தொண்டர்களை உற்சாகப்படுத்திய செல்லூர் ராஜு
மதுரை: மதுரை மாநாட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசியிருந்தார்.
மதுரையில் அதிமுக மாநாடு கோலாகலமாக தொடங்கி தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த மாநாட்டில் மாஜி அமைச்சர் ஒவ்வொருவராக பேசினர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.

அவர் பேசுகையில் ஒரு நிமிஷம் ஓ போடலாமா. அண்ணன் எடப்பாடியாருக்கு ஒரு ஓ போடுங்கள். மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும். மாசு குறையாத மன்னவன் இவன் என போற்றி புகழ வேண்டும். இதை சொன்னவர் நம் தலைவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
மலை பெயர்ந்தாலும் நிலை குலையாத மாணிக்கத் தலைவி, நம் தங்கத் தாய்.. ஒன்றரை கோடி தொண்டர்களை தன்னுடைய உயிராக உறவாக நினைத்து, தமிழக மக்களால் அம்மா என அழைக்கப்பட்டவர்.
இவர்களுடைய ஒட்டுமொத்த உருவமாக கழகத்திற்கு கிடைத்திருக்கக் கூடிய அருமருந்துதான் எடப்பாடியார். இந்த இடம் அறுபடை வீடுகளில் முதற்படை வீடு. காலையில் மாவட்டத்தின் சார்பாக எடப்பாடியாருக்கு வைர வேல் கொடுத்தோம். அந்த வேலை எதற்கு கொடுத்தோம் தெரியுமா. பொம்மை முதல்வரின் திமுக ஆட்சியை சம்ஹாரம் செய்ய போகிற நம் முருகராக அவதாரம் எடுத்திருக்கிறார் பழனிசாமி.
இவர் ஒரு சாமி, இரு சாமி அல்ல. ஆறுசாமி... அடக்கத்தின் மறுவடிவமாக இருக்கிறார் நம் அண்ணன் என பேசினார். செல்லூர் ராஜு பேச பேச எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டே இருந்தார். அவருக்கு நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்த வண்ணம் இருந்தனர்.
இந்த மாநாட்டில் 3 வேளை உணவு, இலவச மருத்துவ முகாம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் என்ற பட்டம் அளிக்கப்பட்டது. இதை சர்வசமய பெரியோர்கள் வழங்கினார்கள். மாநாட்டில் ஒரு குழந்தை எடப்பாடி பழனிசாமிக்கு முத்தம் கொடுக்க எடப்பாடியாரும் அந்த குழந்தைக்கு முத்தம் கொடுத்தார்.
மாநாட்டில் தொண்டர்களுக்கு எனர்ஜி கொடுத்தது தேவாவின் பாடல்கள். மதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் வழிநெடுக வாகனங்கள் நின்றிருந்ததால் எடப்பாடியார் பேச்சை கேட்க வாகனங்களில் இருந்து தொண்டர்கள் இறங்கி நடந்தே சென்றனர். இந்த மதுரை மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications