’கூகுள் லிப்’ விக்குறாங்க..தலைவா அது கூல் லிப்! பாரு..அதுகூட தெரியல! சிரித்து சமாளித்த செல்லூர் ராஜூ
மதுரை: அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி சைக்கிள் கொடுத்தோம், ஆனால் திமுக அரசு மாணவர்களுக்கு கஞ்சா பீர், சப்ளை செய்கிறது எனவும், எங்கு பார்த்தாலும் மாணவர்கள் கூகுள் லிப் வைத்துக் கொண்டு சுற்றுகிறார்கள் என பேசினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. கூல் லிப் என்பதற்கு பதிலாக கூகுள் லிப் என கூற அருகிலிருந்த நிர்வாகிகள் உஷாராகி நினைவு படுத்தினர். அப்போது பாருங்க எனக்கு அதுகூட தெரியல என சிரித்தவாறு சமாளித்தார் செல்லூர் ராஜூ.
மதுரை விளாங்குடி பகுதியில் எம்ஜிஆர் மன்றம் மற்றும் அதிமுக கொடியேற்றி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," மதுரையில் அதிமுக கொடி ஏற்றுவதற்கு காவல்துறையினர் இடையூறு கொடுத்ததற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். போலீசார் உருட்டல், மிரட்டல், அதிமுககாரனிடம் பருப்பு வேகாது, நாங்கள் பல்வேறு அடக்குமுறைகளை பார்த்து வந்தவர்கள். நாங்கள் காவல்துறையை கண்ணியமிக்கவர்களாக நடத்தி உள்ளோம்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு கேவலமாக உள்ளது, தபால் தந்தி நகரில் நடைபயிற்சி சென்ற பெண்ணை தடவி விட்டு செல்கிறார் ஒருவர். ஆசிரியர் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது பள்ளிக்குள் சென்று வெட்டுகிறார்கள். உச்சநீதிமன்றம் இந்த திமுக அரசாங்கத்தை ஆட்சி நிர்வாகம் சரியில்லை என பலமுறை தலையில் கொட்டுகிறது. காவல்துறைக்கு கொஞ்சம் கூட வெட்கம், மானம், ரோஷம் எதுவும் இல்லை. மதுரையில் சித்திரை திருவிழாவில் மக்களுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை.
காவல்துறை எங்களை அடக்க நினைப்பது என்ன நியாயம், சாதுமிரண்டால் காடு கொள்ளாது, நாங்கள் கண்ணியமிக்கவர்கள். எங்கள் ஆட்சிக் காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருந்தது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் தலை விரித்து ஆடுகிறது, மெத்தனால் பல மாநிலங்களில் இருந்து வருகிறது, கள்ளச்சாராய சாவு வழக்கை நீதிமன்றமே சிபிஐ வசம் ஒப்படைத்துவிட்டது. அந்த அளவிற்கு தமிழக காவல்துறை மோசமாக செயல்படுகின்றனர்.
தற்போது தமிழகத்தில் மிட்டாய் வடிவில் போதை மாத்திரைகள் விற்கப்படுகிறது, மாணவர்கள் கூகுள் லிப் வைத்துக் கொண்டு சுற்றுகிறார்கள் என்றார். அப்போது அருகிலிருந்த நிர்வாகிகள் அதனை கவனித்து கூல் லிப் பயன்பாடு அதிகம் உள்ளது என்றனர். உடனடியாக சிரித்து சமாளித்த செல்லூர் ராஜு 'பாருங்க அது கூட எனக்கு தெரியல சிரித்து சமாளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்," தமிழ்நாட்டு மக்களுக்கு விடியல் இல்லை, உண்மையான விடியல் வேண்டும் என்றால் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஆர் எஸ் பாரதி அவர்களே, எங்கள் ஆட்சியில் கள்ளச்சாராயம் சாப்பிட்டு இறந்து போனார்களா? சும்மா ஊது குழலாக இருக்கக்கூடாது. ஒரு கொம்பனும் இந்த ஆட்சியை குறை சொல்ல முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார், மாண்புமிகு நீதியரசர் சொல்லிவிட்டாரே?
திரைப்பட நடிகை கஸ்தூரி, மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது, எல்லாரும் பேசியது போல் அவரும் பேசியுள்ளார், கஸ்தூரிக்கு நான் ஆதரவாக பேசவில்லை, நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை அமைத்து பிடித்துள்ளனர். ஒரு நடிகையைப் பிடிக்க இவ்வளவு அவசரம் தேவையில்லை. தமிழக காவல்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை ஒரு வருடத்திற்கு மேலாகியும் பிடிக்க முடியவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications